Crime: வேடசந்தூர் அருகே அரசு மதுபான கடை முன்பு மது பாட்டிலால் குத்தி இளைஞர் கொலை
வேடசந்தூர் அருகே அரசு மதுபான கடை முன்பு மது பாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உமாராணி (42). இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் கோயமுத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோயம்புத்தூரில் பெயிண்டராக வேலை பார்க்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த கணேசன் 30 என்பவருடன் உமா ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கணேசனுக்கும் உமாராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், உமாராணி கோபித்துக் கொண்டு அவரது சொந்த ஊரான தேவநாயக்கன்பட்டிக்கு சென்று விட்டார். இதை அறிந்த கணேசன் கோயம்புத்தூரில் இருந்து உமாராணியை பார்க்க தேவநாயக்கன்பட்டி வந்துள்ளார். வந்த இடத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான காளிதாஸ்(27) என்பவரை உமாராணி அழைத்து கணேசனை கோயம்புத்தூருக்கு பஸ் ஏற்றி விடுமாறு கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து காளிதாஸ், கணேசனை வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் இருவரும் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடையில் மது வாங்கி அருகே உள்ள பகுதியில் அமர்ந்து குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு காளிதாஸ் கணேசனை தாக்கியுள்ளார். இது குறித்து கணேசன், உமாராணிக்கு போன் செய்து கூறியுள்ளார்.
அதன் பின்னர் உமாராணி ஒரு வாடகை காரில் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடை அருகே சென்று காரில் உட்கார்ந்தபடி சமாதானம் செய்துள்ளார். அப்போது கணேசன் தான் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து காளிதாசின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காளிதாஸ் காரை விட்டு கீழே இறங்கிய நிலையில் சுருண்டு விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கணேசனை தேடி வருகின்றனர். இளைஞர் ஒருவர் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets