வாயில் திணிக்கப்பட்ட நாணயங்கள்.. மேடை நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உற்சாக மிகுதியில் பார்வையாளர்களில் சிலர் மேடையில் ஏறி இளம் பெண்ணுடன் இணைந்து நடனமாடினர். அப்போது அந்த பெண் வாயில் நாணயங்களை திணித்தனர்.

பீகாரில் மேடை நிகழ்ச்சியின்போது நடனம் ஆடிய பெண்ணின் வாயில் நாணயத்தை திணித்து இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் போஜ்பூரில் உள்ள சந்த்வா டோலா பகுதியில் ஒரு மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இளம்பெண் ஒருவரின் நடனம் நடைபெற்றது. நம் ஊரில் இதுபோன்று நடனம் ஆடும் கலைஞர்களை ஊக்குவிக்க அவர்களின் ஆடையில் பணம் குத்தும் பழக்கம் இன்றளவும் உள்ளது. இப்படியான நிலையில் அந்த பெண் அங்கிருந்த கூட்டத்தினரை மகிழ்வித்தபடி ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போது உற்சாக மிகுதியில் பார்வையாளர்களில் சிலர் மேடையில் ஏறியுள்ளனர். அந்த பெண்ணுடன் இணைந்து நடனமாடிய நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக நாணயங்களை ஒன்றை அப்பெண்ணின் வாயில் திணித்து வலுக்கட்டாயமாக விழுங்க வைத்துள்ளனர். அவற்றில் ஒன்றை அந்த பெண் விழுங்க மூச்சு விட முடியாமல் திணறியுள்ளார். இதனைத் தொடர்ந்து நிலைமை மோசமடைவதை உணர்ந்த அந்த பெண்ணின் கணவர் ராஜு குமார் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக ஆரா சதார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் தீவிர பரிசோதனை மேற்கொண்டு அப்பெண்ணின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை அகற்றினார். ஆனால் அந்த பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மேடை கலைஞர்களின் பாதுகாப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேடை நிகழ்ச்சிகளில் கலைஞர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்ய நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கொலை வெறி தாக்குதல்
உத்தரப்பிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்தின்போது பாடல்களை ஒலிபரப்பிய டிஜே மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் வந்த கிராமத் தலைவர் ராஜேஷ் யாதவின் மகன் ரௌனக் யாதவ் என்பவர் பாடல்களை ஒலிபரப்பிய டிஜே சிவாவை மேடையில் இருந்து கீழே தள்ளி விட்டு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சி முடிந்து சிவாவும், அவருடன் வந்த முகேஷூம் பைக்கில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் ரௌனக் யாதவ் ஒரு சாலையில் காருடன் காத்திருந்து இந்த பைக்கின் மீது மோதியது. இதில் சிவா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.























