![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'என் சாவுக்கு ஐ.எஃப்.எஸ் நிறுவனம்தான் காரணம்’ - உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் விபரீத முடிவு
வேலூரில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் கட்டி ஏமாந்த இளைஞர் என் சாவுக்கு ஐ.எஃப்.எஸ் தான் காரணம்’ உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
!['என் சாவுக்கு ஐ.எஃப்.எஸ் நிறுவனம்தான் காரணம்’ - உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் விபரீத முடிவு Crime IFS company is responsible for my death after writing a passionate letter the youth made a tragic decision TNN 'என் சாவுக்கு ஐ.எஃப்.எஸ் நிறுவனம்தான் காரணம்’ - உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் விபரீத முடிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/03/a00e1387a467d622996dc2bd7eb1093c1683090804367187_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேலூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடியை வசூலித்து, மோசடி செய்துள்ளது. ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் மீதான நடவடிக்கை, எட்டு மாதங்களுக்கு மேலாகியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை, இயக்குநர்களாக இருந்து நடத்திவந்த சகோதரர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேதநாராயணன், மோகன்பாபு ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். அவர்கள் ‘தேடப்படும் குற்றவாளிகள்’ என தமிழ்நாடு காவல்துறை அறிவித்தது. ஆனாலும், மோசடி சகோதரர்கள் நான்கு பேரைப் பற்றிய எந்தவொரு தகவலும் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ரூபாய் 26 லட்சம் முதலீடு செய்து, பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லேரி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பிரசாத் என்பவர் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு அவரின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரை மாய்த்துகொள்வதற்கு முன்பு கைப்பட அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘‘அதிக வட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறியதால், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரிய கரும்பூரைச் சேர்ந்த வெங்கடேஷிடம் ரூபாய் 26 லட்சம் கொடுத்து ஏமாந்துவிட்டேன். அவர் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் ஏஜென்ட்டாகச் செயல்பட்டுவந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையரினால், வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுவிட்டார். நான் கடன் வாங்கி, அவ்வளவுப் பணத்தையும் வெங்கடேஷிடம் தான் கொடுத்திருந்தேன். இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்பதால், என்னால் திருப்பித் தர முடியவில்லை. தனிப்பட்ட முறையிலேயே, நான் ரூபாய் 12 லட்சத்துக்கு மேலாக வட்டி கொடுத்துவிட்டேன். அதிக கடன் சுமையில், மாட்டிக்கொண்டேன். என் சாவுக்கு ஐ.எஃப்.எஸ் நிறுவனம்தான் காரணம். தயவுசெய்து, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோரிடம் உரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
தகவல் அறிந்து வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதே நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த காட்பாடியை சேர்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)