PF உறுப்பினர் இறந்துவிட்டாரா? குடும்பத்தினர் நிதி, பென்ஷன், இன்சூரன்ஸ் பலனை பெறுவது எப்படி?
PF Claim After Death: வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் உறுப்பினர் இறந்துவிட்டால் அவர் தொடர்பான ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்களை குடும்பத்தினர் பெறுவது எப்படி? என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

EPFO: வருங்கால வைப்பு நிதி முதலில் உறுப்பினரால் பதிவு செய்யப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு வழங்கப்படும் என விதிகள் தெரிவிக்கின்றன.
EPFO உறுப்பினர்களின் வாரிசுகளுக்கான அப்டேட்கள்
வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் உறுப்பினர் இறந்துவிட்டால் அவர் தொடர்பான வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்களை குடும்பத்தினர் EPFO போர்டல் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே உரிமை கோர முடியும். முன்னதாக உமாங் செயலியில் இந்த வசதி இருந்த நிலையில், தற்போது EPFO இணையதளம் வாயிலாக மட்டுமே அணுக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் உறுப்பினர் காலமானால், அவரது கணக்கில் திரட்டப்பட்ட சேமிப்பு காலாவதியாகாது. மாறாக, பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் செயல்முறையைப் பின்பற்றுவதன் மூலம், நியமனதாரர் அல்லது தகுதியுள்ள சட்டப்பூர்வ வாரிசுகள் அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
EPFO - யாருக்கு வாரிசு அங்கீகாரம்?
வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர் உயிரிழந்தால் திட்டப் பலன்கள், முதலில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட நியமனதாரருக்கு வழங்கப்படுகிறது. நியமனம் எதுவும் இல்லாத பட்சத்தில், அந்தத் தொகை தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களிடையே சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. EPFO விதிகளின்படி, இறந்த உறுப்பினரின் பணத்தை பெற அவரது வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். ஒரு உறுப்பினர் பரிந்துரை பட்டியலை தாக்கல் செய்யும் போது அவருக்குக் குடும்பம் இல்லையென்றால், அவர் தனது விருப்பப்படி எந்த நபரையும் பரிந்துரை செய்யலாம். இருப்பினும், அந்த உறுப்பினர் பின்னர் திருமணம் செய்துகொண்டாலோ அதன் மூலம் குடும்பம் உருவானலோ, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒரு புதிய பரிந்துரை ஆவணத்தை சமர்பிப்பது அவசியமாகிறது. உறுப்பினர் திருமணமாகாதவராகவும், உயிருடன் இருக்கும் துணைவர் அல்லது தகுதியுள்ள குழந்தை இல்லாதவராகவும் இருக்கும் பட்சத்தில், உடன்பிறந்தவரையும் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காகப் பரிந்துரைக்கலாம். முறையான பரிந்துரைக்கப்பட்ட நபரோ அல்லது தகுதியுள்ள குடும்ப உறுப்பினரோ இல்லாத பட்சத்தில், சட்டப்படி அதைப் பெற உரிமையுள்ள நபருக்கு அந்தப் பணம் வழங்கப்படும்.
வாரிசுகள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
கோரிக்கை நடைமுறையை தொடங்குவதற்கு முன், சில ஆவணங்களை கட்டாயம் தயாராக வைத்திருக்க வேண்டும். அதில்
- உயிரிழந்த உறுப்பினரின் 12 இலக்க உலகளாவிய கணக்கு எண் (UAN)
- இ-நாமினேஷனில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளியின் ஆதார், பெயர் மற்றும் பிறந்த தேதி.
உறுப்பினரின் இறப்புச் சான்றிதழ் (PDF, 2 MB வரை) - ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது பயனாளியின் வங்கிப் பாஸ்புக் (PDF, 2 MB வரை)
இதையும் படியுங்கள்: Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
ஆன்லைனில் க்ளெய்மிற்கு தாக்கல் செய்வது எப்படி?
EPFO உறுப்பினர் இணையதளம் மூலம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். முதலில், இறந்த உறுப்பினரின் UAN எண்ணை, பயனாளியின் ஆதார் விவரங்கள், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சாவுடன் உள்ளிடவும். "அங்கீகார PIN-ஐப் பெறு" என்பதைக் கிளிக் செய்த பிறகு, சரிபார்ப்பிற்காக உறுப்பினரின் கணக்குடன் இணைக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்து இணையதளத்திற்குள் நுழைந்த பிறகு, மரணக் கோரிக்கை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பணியாளரின் விவரங்களை மதிப்பாய்வு செய்து, மரணத் தேதியை குறிப்பிட்டு, மரணச் சான்றிதழைப் பதிவேற்றவும். பின்னர், பயனாளியின் தொடர்பு மற்றும் முகவரி விவரங்களை வழங்கவும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதியைப் பொறுத்து, பின்வரும் கோரிக்கைகளில் ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்டவற்றையோ தேர்வு செய்யலாம்:
- வருங்கால வைப்பு நிதியிலிருந்து மொத்தமாகப் பணம் எடுப்பதற்கான படிவம் 20
- மாதாந்திர ஓய்வூதியத்திற்கான படிவம் 10D
- EDLI காப்பீட்டுப் பலன்களுக்கான படிவம் 5IF
இறுதியாக, பயனாளியின் வங்கி விவரங்களை பதிவு செய்து, ரத்து செய்யப்பட்ட காசோலையைப் பதிவேற்றி, பயனாளியின் ஆதார் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐப் பயன்படுத்தி சமர்ப்பிப்பை நிறைவு செய்யவும். உரிய கால இடைவெளியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனருக்கான பலன்கள் கிடைக்கப்பெறும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























