TN Budget 2026: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்.. காது குத்தும் விழா என கலாய்த்த அதிமுக!
Tamil Nadu Interim Budget 2026: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதிமுக அதனை கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்காக அழைப்பிதழ் ஒன்றை அச்சடித்துள்ளது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை மாபெரும் காது குத்தும் விழா என அதிமுக விமர்சித்து அழைப்பிதழ் அடித்துள்ளது.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. இப்படியான நிலையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
அப்படியாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் வருகை தந்த போது கையோடு அழைப்பிதழ் ஒன்றையும் எடுத்து வந்திருந்தனர். அதில், “மாபெரும் காது குத்தும் விழா” என இடம் பெற்றிருந்தது.
மேலும் கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழாஇந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், “நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார்” என இடம் பெற்றிருந்தது.
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
— AIADMK - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) February 17, 2026
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு… pic.twitter.com/OTnhRin9mO
இறுதியாக அந்த அழைப்பிதழில் கூவம் சுத்திகரிப்பு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நீதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். பின்குறிப்பு வகையில், “சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் மொய் வைக்கலாம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஊடகத்தினரிடம் காட்டினர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.























