Budget 2026 Expectations: வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஜாக்பாட்.. பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
கடந்த 2025-2026ம் ஆண்டு போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பானது ரூ.12 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

2026-2027ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில் மில்லியன் கணக்கான வரி செலுத்தும் இந்திய மக்கள் பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பான நல்ல செய்தி கிடைக்குமா என பலரும் காத்திருக்கின்றனர்.
கடந்த 2025-2026ம் ஆண்டு போடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பானது ரூ.12 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. 3வது முறையாக பாஜக ஆட்சியை கொண்டு வந்ததற்கான பரிசு என பலரும் மகிழ்ந்தனர். இந்த நிலையில் 2026 பட்ஜெட்டில் நாட்டின் நிதி சவால்களுக்கு இடையே வரி விலக்கு தொடருமா அல்லது அதே நிலை நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வருமான வரி சீர்திருத்தம் அமலுக்கு வருகிறது. 1961ம் ஆண்டு அமல்படுத்த பழைய வருமான வரி திட்டமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரியில் உள்ள சிக்கலான நிலையை மாற்ற்யமைக்கவும், ஏராளமான பிரிவு அடிப்படையிலான விலக்குகளை முறைபடுத்தி தூய்மையான, குறைந்த விகித கட்டமைப்பை நோக்கி நகர்ந்து விக்சித் பாரத் 2047 திட்டத்தின் கீழ் எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த புதிய வரி முறையானது தற்போது ரூ.4 லட்சம் வரை வருமானத்திற்கு அடிப்படை விலக்கு வரம்பின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.இதை ரூ.5 லட்சம் அல்லது ரூ.6 லட்சமாக உயர்த்தலாம் என்று வரி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.15 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய விதிகளின்படி, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை மட்டுமே வீட்டு வாடகைப்படி கணக்கீட்டிற்கு மெட்ரோ நகரங்களாகத் தகுதி பெற்றுள்ளது. இதனால் ஊழியர்கள் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரை விலக்கு கோர முடியும் என்ற சூழல் இருந்தது. 2026 பட்ஜெட் இந்தப் பட்டியலில் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனேவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரி முறையின் மீது கவனம் தொடர்ந்து இருந்தாலும், பழைய முறையைத் தொடர்ந்து விரும்பும் வரி செலுத்துவோரை அரசாங்கம் புறக்கணிக்க முடியாது என்பதால் அதுவும் தொடரும்.
எனினும் முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் வரி விதிகளை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே இதனை எளிதாக எதிர்கொள்ள முடியும். இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்க நேரிடும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக முதல்முறை வருமான ஈட்டுபவர்களுக்கு இந்த விலக்குகளிலிருந்து முழு தொகையையும் பெறுவது பெரும்பாலும் கடினம் என கணிக்கப்பட்டுள்ளது.
ரூ. 1.5 லட்சம் வரை விலக்குகளை அனுமதிக்கும் பிரிவு 80C, 2014 முதல் மாறாமல் உள்ள நிலையில் அதன் வரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சுகாதார காப்பீடு பிரிவான 80D ரூ.25 ஆயிரம் வரை விலக்கு அளிக்கும் நிலையில், இது ரூ.50 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. வீட்டுக்கடன் வட்டிக்கான வரி விலக்கு ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்படும் நிலையில் ரியல் எஸ்டேட் துறையில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.






















