Jeep SUV: ஈ அடிக்கும் டீலர்கள்..! பாதாளத்தில் விற்பனை- ப்ரீமியம் எஸ்யுவி, கம்மி விலையில் சந்தையை பிடிக்க ஜீப் தீவிரம்
Jeep remium SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய ப்ரீமியம் எஸ்யுவியை அறிமுகப்படுத்தி, விற்பனையை மேம்படுத்த ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Jeep remium SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜீப் நிறுவனத்தின் புதிய ப்ரீமியம் எஸ்யுவி, 2027ம் ஆண்டில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈ அடிக்கும் டீலர்கள்..! பாதாளத்தில் விற்பனை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நம்பகமான எஸ்யுவி உற்பத்தியாளராக இருந்தாலும், ஜீப் நிறுவனத்தின் விற்பனை என்பது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பல மாதங்களில் ப்ராண்டின் விற்பனை வெறும் 200-250 யூனிட்களுக்குள்ளாகவே சுருங்கிவிட்டது. இதனால், டீலர்ஷிப் நிலையங்கள் வாடிக்கையாளர்கள் இன்றி காற்றடித்து வருகிறது என்றே கூறலாம். காம்பஸ், மெரிடியன், வ்ராங்க்லர் மற்றும் க்ராண்ட் செரோகி என போர்ட்ஃபோலியோ வலுவானதாக இருந்தாலும் விற்பனை மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் தான், புதிய ப்ரீமியம் எஸ்யுவியை இறக்கி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க ஜீப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜீப்பின் புதிய ப்ரீமியம் எஸ்யுவி
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு பல புதிய மாடல்களை தயார்படுத்தி வரும் ஜீப் நிறுவனம், 2027ம் ஆண்டு தனது முதல் மாடலை அறிமுகப்படுத்த உள்ளதாம். உள்நாட்டு சந்தையில் விற்பனையை ஊக்குவிப்பதற்கான புதிய மாடல்களை கொண்டு வருவதோடு, போட்டித்தன்மையுடன் விலையை நிர்ணயிக்க 90 சதவிகிதம் உள்நாட்டிலேயே காரை தயாரிக்கவும் ப்ராண்ட் முனைப்பு காட்டுகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ள ஜீப் நிறுவனம், இந்திய சந்தையை உள்நாட்டு விற்பனைக்கானதாக மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் முக்கியத்துவமானதாக பரிசீலிக்கிறதாம்.
புதிய காரும்.. பவர்ட்ரெயின் விவரங்களும்..
இந்திய சந்தையில் ஜீப் நிறுவனம் தற்போது சற்றே பழமையான போர்ட்ஃபோலியோவை தான் கொண்டுள்ளது. அண்மைக்காலமாக மெரிடியன் மற்றும் காம்பஸ் போன்ற மாடல்கள் டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே கொண்டிருந்தது, வாடிக்கையாளர்களுக்கான அணுகலை சிரமமாக்கியது. இந்நிலையில், கூடுதல் வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், மலிவான் விலையில் கார்கலை சந்தைப்படுத்தவும் புதிய மாடல்களில் பெட்ரோல் ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளதாம். அதன்படி, புதிய பவர்ட்ரெயின் விருப்பங்களில் வரவிருக்கும் கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

புதிய எஸ்யுவியின் போட்டி யாருடன்?
இந்திய சந்தைக்கு வரவுள்ள புதிய காரானது முற்றிலும் புதிய மாடலாக இருக்குமென கூறப்படுகிறது. இது கட்டாயம் காம்பஸ் எஸ்யுவியை போன்றே ப்ரீமியம் எஸ்யுவி ஆக தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை காம்பஸ் இந்தியாவிற்கு வரவாய்ப்பில்லையாம். புதிய ப்ளாட்ஃபார்ம் மற்றும் கூடுதல் செலவு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அண்மைக்காலமாக இந்தியாவில் ஜீப் நிறுவனத்தால் எந்தவொரு எஸ்யுவியும் அறிமுகப்படுத்தப்படாத சூழலில், அடுத்த ஆண்டு வெளியாக உள்ள புதிய எஸ்யுவி ப்ராண்டிற்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்தியாவிற்கான ஜீப் 2.0 திட்டத்தின் மூலம், ப்ராண்ட் தனது வாடிக்கையாளர் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு புதிய மாடல்களை தயாரிக்கிறதாம். இந்த புதிய மாடல் பெரும்பாலும் ரேஞ்சில் கூடுதலாக இருக்கும், மேலும் காம்பஸுடன் சேர்த்து விற்கப்படும். போதுமான விவரங்கள் தற்போது வெளியாகாவிட்டாலும், ஆண்டின் இறுதியில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. உள்நாட்டு சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்ய, அதிக விற்பனையை பதிவு செய்யும் பிரிவில் வாகனத்தை களமிறக்க ஜீப் திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிய ப்ரீமியம் எஸ்யுவியின் விலை ரூ.15–30 லட்சம் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
























