மக்களே… இனி ஓலா, உபர், டெலிவரியில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை- எங்கே தெரியுமா?
டெல்லி என்.சி.ஆர் பகுதியில் 2026 முதல் பெட்ரோல், டீசல் கேப்கள் மற்றும் டெலிவரி வாகனங்களுக்கு ஹரியானா அரசு தடை

டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹரியானா மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி 2026ஆம் ஆண்டு முதல் ஹரியானாவின் என்.சி.ஆர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக வாங்கப்படும் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாடகை கார்கள் மற்றும் வர்த்தக ரீதியான இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர டெலிவரி வாகனங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட உள்ளது.
என்ன காரணம்?
குருகிராம், ஃபரிதாபாத், சோனிபட், ரோஹ்தக் உள்ளிட்ட ஹரியானாவின் முக்கிய நகரங்கள் என்சிஆர் பகுதியில் வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தின்போது டெல்லி மற்றும் இந்த என்.சி.ஆர் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து மனிதர்கள் சுவாசிக்க முடியாத அபாயகரமான கட்டத்தை எட்டுகிறது.
இதில் தொழிற்சாலைகளின் புகையை விட, மோட்டார் வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையின் பங்கு மிக அதிகமாக உள்ளது. எனவே, காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் கடுமையான வழிகாட்டுதல்களின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய வண்டிகளில் புரட்சிகர மாற்றம்
இந்த விதியின்படி, புதிதாக வாங்கப்படும் வாடகை கார்கள், பைக்குகள் மற்றும் இ காமர்ஸ் நிறுவனங்களின் சரக்கு வாகனங்கள், உணவு விநியோகம் செய்யும் வாகனங்கள் என அனைத்து விதமான வணிக ரீதியான டெலிவரி வாகனங்களும் பெட்ரோல், டீசலில் இயங்கக் கூடாது. 2026-ம் ஆண்டு முதல், புதிதாக பதிவு செய்யப்படும் அனைத்து வர்த்தக வாகனங்களும் கட்டாயமாக மின்சார வாகனங்களாகவோ அல்லது சி.என்.ஜி மூலம் இயங்கும் வாகனங்களாகவோ மட்டுமே இருக்க வேண்டும். எனினும் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படவில்லை.
இந்த புதிய கொள்கையின் காரணமாக, போக்குவரத்து மற்றும் விநியோகத் துறையில் இயங்கும் பெருநிறுவனங்கள் தங்களது வாகனக் கூட்டமைப்பை படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்கான மாற்று ஏற்பாடுகளை தற்போதில் இருந்தே நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படும்போது, டெல்லி என்.சி.ஆர் பகுதியில் வாகனங்களால் ஏற்படும் நச்சுப் புகை மற்றும் காற்று மாசு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























