அடித்தது அதிர்ஷ்டம்... அரசின் அசத்தல் திட்டம் ; துள்ளிக்குதிக்கும் விவசாயிகள் ...என்ன தெரியுமா ?
வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ் 49,500 காய்கறி விதை தொகுப்புகளும், 30,550 பழச்செடி தொகுப்புகளும் மற்றும் 3,000 பயறுவகை விதை தொகுப்புகளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

விழுப்புரம்: வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ், காய்கறி விதை தொகுப்பு, பழச்செடி தொகுப்பு மற்றும் பயறு வகை விதை தொகுப்புகள் விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
100 சதவீத மானியத்தில் பயறுவகை மற்றும் விதை தொகுப்பு
விழுப்புரம் மாவட்டத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறையின் மூலம் காய்கறி விதை தொகுப்புகள் மற்றும் பழச்செடி தொகுப்புகளும், வேளாண்மைத் துறையின் மூலம் பயறுவகை விதை தொகுப்புகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜூலை-4ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 49,500 காய்கறி விதை தொகுப்புகளும், 30,550 பழச்செடி தொகுப்புகளும் மற்றும் 3,000 பயறுவகை விதை தொகுப்புகளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் நடைபெற உள்ள வேளாண் ஊட்டச்சத்து திட்டத்தின் துவக்க விழாவில் அனைத்து விவசாய பெருமக்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் நலமும் நல்வாழ்வும் அவர்கள் உண்ணும் உணவைப் பொறுத்தே அமைகின்றது. காய்கறிகள் மற்றும் பழங்கள் தினசரி தேவை சராசரியாக ஒரு நபருக்கு 400 கிராம் ஆகும். ஊட்டச்சத்துமிக்க நஞ்சற்ற காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறி தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக, 6 வகையான காய்கறி விதைகள் (தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை மற்றும் கீரை) அடங்கிய தொகுப்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பயனளிக்கும் பப்பாளி, கொய்யா மற்றும் எலுமிச்சை ஆகிய 3 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
வேளாண்மைத்துறையின் மூலம் 3 வகையான பயறுகள் (மரத்துவரை, காராமணி, அவரை) அடங்கிய பயறு வகை விதை தொகுப்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் ஆதார் நகலுடன் தங்களின் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அனுகியும் அல்லது தாங்களாகவே https://tnhorticulture.tn.gov.in/kit/ இணையத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.




















