மேலும் அறிய
விழுப்புரம் பெண் விவசாயியின் சாதனை: ஜாம் புளிச்சங்காய் சாகுபடியில் மாதம் 80,000 ரூபாய் வருமானம்
ஜாம் புளிச்சங்காய் (தோல் பகுதி) ஜாம் தயாரிக்கவும், மருந்துகள் தயார் செய்யவும் வாங்கிச் செல்லப்படுகிறது.

பெண் விவசாயி சுகந்தி
Source : ABP NADU
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முதன்முறையாக ஜாம் புளிச்சங்காய் பயிரிட்டு மாதம் 80,000 ரூபாய் வரை வருமான ஈட்டி சாதனை படைத்து வருகிறார் பெண் விவசாயி சுகந்தி.
ஜாம் புளிச்சங்காய் விவசாயம்
விழுப்புரம் மாவட்டத்திலே முதன்முறையாக ஜாம் புளிச்சங்காய் பயிரிட்டு மாதம் 80,000 ரூபாய் வரை வருமான ஈட்டி வருகிறார் பெண் விவசாயி சுகந்தி . உத்தரபிரதேசம், குஐராத் ,ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படும் ஜாம் புளிச்சங்காய். தற்போது பல வகையான மருந்துகள் தயாரிப்புக்காக தமிழகத்திலும் பயிரிடப்படுகிறது. விருத்தாசலம், விழுப்புரம், சேலம் போன்ற பகுதிகளில் 200 ஏக்கர் பரப்பளவில் இந்த ஜாம் புளிச்சக்காய் விவசாயம் கொடிகட்டி பறக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி - அங்கப்பன் தம்பதியினர் தங்களது 50 சென்ட் நிலத்தில் ஜாம்புளிச்சக்காயை பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.
ஜாம்புளிச்சங்காய் குறித்து பெண் விவசாயி சுகந்தி கூறியதாவது:-
நர்சிங் டிப்ளமோ, அக்ரிகல்ச்சர் படித்து முடித்து இருக்கிறேன். தற்போது வீட்டில் நெல்லிக்காயை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். "எங்களுக்குச் சொந்தமாக 50 சென்ட் விவசாய நிலம் உள்ளது. அதில் நெல், உளுந்து கம்பு என குறைந்தளவில் நிறைவான விவசாயம் செய்து வருகிறோம். சமீபத்தில் நண்பர் ஒருவர் ஜாம் புளிச்சக்காய் பற்றி கூறினார். எனக்கு அது பற்றி எந்த ஒரு அனுபவம் இல்லை. அப்படி இருந்த போதிலும் நம்பிக்கையுடன் ஜாம் புளிச்சங்காய் பயிரிட ஆரம்பித்தேன்.
மற்ற பயிர்களைப் போலவே ஜாம் புளிச்சக்காய் சாகுபடியும்
மற்ற பயிர்களைப் போலவே ஜாம் புளிச்சக்காய் சாகுபடியும் எளிதானது தான். இது எல்லாம் மண்ணிலும் நன்றாக வளரும். 90 நாட்களில் சாகுபடி முடிந்து விடும். மூன்று மாத பயிர் என்பதால் விரைவில் வருமானம் பார்க்கலாம். காய்கறி, கீரைகள் விதைப்பது போல இந்த விதைப்பு செய்யலாம். விதைப்பதற்கு முன்பு முதலில் நிலத்தை நன்றாக தயார் செய்து கொள்ளவேண்டும். அதாவது விதைக்க தேர்ந்தெடுத்து உள்ள நிலத்தை ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு உழ வேண்டும். அதன் பின் அடி உரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டர் தொழு உரம் கொடுக்கலாம். தொழு உரம் கிடைக்கவில்லை என்றால் டிஏபி உரம் கொடுக்கலாம். அதன்பின் விதைகளை விதைக்க வேண்டும்.
விதைகளை நிலத்தில் தூவிய பிறகு ரோட்டவேட்டர் மூலம் நிலத்தை ஒருமுறை உழுதால் நிலத்தின் மேல் உள்ள விதைகள் 3 அங்குல அளவிற்கு மண்ணிற்குள் புதைந்து விடும். அதன் பிறகு நிலத்தில் நன்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இந்த முறையில் விதைக்கும் போது ஒரு ஏக்கருக்கு நான்கு கிலோ விதைகள் தேவைப்படும். 50 சென்டில் பயிர் இடுவதால் எனக்கு இரண்டு கிலோ விதைகளை போதுமானதாக இருந்தது. ஒரு கிலோ விதையை 750 ரூபாய்க்கு வாங்கினேன். அந்த வகையில் விதைக்கு மட்டும் 1500 ரூபாய் செலவு செய்தேன்.
விதைத்த மூன்றாம் நாளில் விதைகள் முளைக்க ஆரம்பித்து விடும். அதன் பின் நான்காம் நாள் ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் நிலத்தில் ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கலாம். விதைத்து 15 வது நாளில் ஒரு கலையும் 30 வது நாளில் இரண்டாவது கலையும் எடுத்தாலே போதுமானது. இந்த செடியானது 4.5 அடியில் இருந்து 6 அடி வரை வளரும். ஒரு செடியில் 60 முதல் 70 ஜாம் புளிச்சங்காய்கள் முளைக்கும். செடி மற்றும் காயின் வளர்ச்சிக்காக 30 வது நாள் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ யூரியா கொடுத்தால் போதுமானது. நான் 50 சென்டில் பயிரிட்டிருப்பதால் குறைந்த அளவு யூரியாவை கொடுத்தேன்.
80 நாட்களில் அறுவடை
இப்படி வளர்கிற செடியில் இருந்து 45 வது நாள் மொக்கு வைக்க தொடங்கும். சரியாக 70 வது நாளில் எல்லா செடிகளிலும் மொக்கு பெரிதாகி காய் வந்துவிடும். 80 நாளிலிருந்து இந்த காய்களை அறுவடை செய்ய தொடங்கலாம். இந்த ஜாம் புளிச்சங்காயை பொறுத்தவரை ஒரு ஏக்கருக்கு ஆறு டன் காய்கள் வரை அறுவடை எடுக்கலாம். அறுவடை செய்யப்படும் காய்களுக்குள் முதல் 20 விதைகள் இருக்கும்.
ஜாம், மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது
இந்த விதைகளை காய்களின் இருந்து பிரித்தெடுத்து இரண்டு நாள் காய வைப்போம் அவ்வாறு காய வைக்கும் போது ஏக்கருக்கு ஒன்றரை டன் காய்ந்த விதைகள் கிடைக்கும். காய்ந்த விதை அளவுக்கு தோல் பகுதியும் நமக்கு கிடைக்கும். அதாவது ஒன்றரை டன் விதை கிடைத்தால் ஒன்றரை டன் தோலும் கிடைக்கும். இவற்றை நாம் தனித்தனியே விற்பனை செய்யலாம். காய வைத்த ஜாம்புளிச்சக்காய், அதாவது சிவப்பு நிறத்தில் உள்ள தோல் பகுதி ஒரு கிலோ ரு,100க்கு விற்பனை ஆகிறது. காயில் இருந்து பிரித்தெடுத்த விதைகள் ஒரு கிலோ ரூ 25க்கு விற்பனை ஆகிறது. ஜாம் புளிச்சங்காய் (தோல் பகுதி) ஜாம் தயாரிக்கவும், மருந்துகள் தயார் செய்யவும் வாங்கிச் செல்லப்படுகிறது.
அதன் விதைகள் மருந்து தயாரிப்போடு, மாட்டுத் தீவனம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது நாங்கள் ஜாம் புளிச்சக்காய் அறுவடையைத் தொடங்கி இருக்கிறோம். 30 சென்ட் நிலத்தில் எங்களுக்கு 400 கிலோ காய வைத்த காய்களும் (தோல் பகுதி), 200 கிலோ விதைகளும் கிடைத்திருக்கின்றன.
எனக்கு புதிய பயிர் என்பதால் எனக்கு அது பற்றிய எந்த ஒரு அனுபவும் இல்லை... தற்போது மறுபடியும் இரண்டாவது பறிப்பாக ஜாம் புளிச்சங்காய் அறுவடை செய்து வருகிறோம். அறுவடை செய்யப்படும் விதை மற்றும் தோல் பகுதியை, எனக்கு விதை கொடுத்த அந்த நபரிடம் விற்பனை செய்து விடுகிறேன்.
முதலீட்டு 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ரூபாய் வரை செலவு
தற்போது இதற்கு முதலீடாக பத்தாயிரம் ரூபாய் முதல் 15 ரூபாய் வரை செலவு செய்தேன், ஆனால் இப்போ குறைந்தபட்சம் செலவு போக 80 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளேன். எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் புதிய பயிரை சாகுபடி செய்து வருமானம் ஈட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என சுகந்தி தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்




















