தஞ்சையில் தீவிரமடைந்த கோடை நெல் அறுவடை: வெளிமாவட்ட அறுவடை இயந்திரங்கள் குவிந்தன
தஞ்சாவூர் அருகே உள்ள சாமிப்பட்டி கிராமத்தில், கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான நவீன நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன

வல்லம்: கோடை நெல் அறுவடை பணிகளுக்காக வெளி மாவட்டத்தில் இருந்து அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளன. தஞ்சாவூர் அருகே சாமிப்பட்டி கிராமத்தில் விவசாயிகளின் பல மாத உழைப்புக்கு பலன் தரும் தருணமாக அறுவடைக்காக வந்த இயந்திரங்கள் சாலையோரத்தில் வரிசைக்கட்டி நிற்கின்றன.
காவிரி டெல்டாவின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. தஞ்சாவூர் அருகே உள்ள சாமிப்பட்டி கிராமத்தில், கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான நவீன நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள், டெல்டா மாவட்டத்தில் அறுவடைப் பருவம் முழுவீச்சில் தொடங்கியிருப்பதை வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடிக்காக விவசாயிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர். நிலத்தை உழவு செய்து தயார் செய்வது முதல், விதைப்பு, நாற்று நடவு, உரமிடுதல், களை எடுப்பு, பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை பாதுகாப்பது வரை ஒவ்வொரு கட்டத்திலும் அதிக செலவையும், கடின உழைப்பையும் மேற்கொண்டுள்ளனர். உரங்களின் விலை உயர்வு, பூச்சிக்கொல்லி மருந்துகளின் செலவு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களைத் தாண்டியே விவசாயிகள் சாகுபடி செய்து நெற்பயிரை வளர்த்துள்ளனர்.
கோடை காலத்தின் கடுமையான வெயிலிலும், வயல்களில் தினமும் பல மணி நேரம் உழைத்து நெற்பயிர்களை பராமரித்த விவசாயிகளுக்கு, தற்போது அறுவடை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. பல மாதங்களாக வியர்வை சிந்தி வளர்த்த பயிர்கள் பொன்னிறமாக கதிர் முற்றி, அறுவடைக்கு தயாராக நிற்பது விவசாயிகளின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
தற்போதைய சூழலில் விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், நவீன அறுவடை இயந்திரங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் பல ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை அறுவடை செய்யும் திறன் கொண்ட இந்த அறுவடை இயந்திரங்கள், அறுவடை காலத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், திடீர் மழை அல்லது வானிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய இழப்புகளையும் தவிர்க்க உதவுகின்றன.
இதன் காரணமாகவே திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான அறுவடை இயந்திரங்கள் தஞ்சாவூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சாமிப்பட்டி கிராமத்தில் சாலையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள், விவசாய நிலங்களில் பணிகளைத் தொடங்குவதற்காக காத்திருக்கும் காட்சி, அப்பகுதியில் அறுவடை பருவத்தின் உற்சாகத்தை பிரதிபலிக்கிறது.
அறுவடைக்கு முன்பாக இயந்திரங்களை பரிசோதனை செய்வது, எரிபொருள் நிரப்புவது, வெட்டும் கருவிகளை சீரமைப்பது போன்ற பராமரிப்பு பணிகளில் இயந்திர ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளும் தங்கள் வயல்களில் ஈரப்பததிற்கு தகுந்தார்போல் அறுவடைக்கு ஏற்ற நிலையில் பயிர்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்து இயந்திரங்களை வரவழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய ஆதார விலை கிடைக்க வேண்டும், கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவில் செயல்பட வேண்டும், விவசாயிகளின் பல மாத உழைப்புக்கு நியாயமான வருமானம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















