விவசாயிகள் கவனத்திற்கு! பயிர் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு: கடைசி நாள் எப்போது?
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2026-27 காரீப் பருவ நெல், நிலக்கடலை, கம்பு, வாழை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு!

விழுப்புரம் : பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2026-27 காரீப் பருவ நெல், நிலக்கடலை, கம்பு, வாழை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2026-27ஆம் ஆண்டிற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள காரீப் 2026 பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2026-27ஆம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கு 13 வட்டாரங்களில் உள்ள 380 வருவாய் கிராமங்களில் நெல்-1 பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் நிலக்கடலை 24 குறுவட்டங்களிலும், கம்பு 8 குறுவட்டங்களிலும், வாழை 7 குறுவட்டங்களிலும் மற்றும் மரவள்ளி 5 குறுவட்டங்களிலும் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. காரீப் பருவத்தில் நெல்-1 நடவு செய்துள்ள விவசாயிகள் 31.07.2026-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நிலக்கடலை, கம்பு நடவு செய்துள்ள விவசாயிகள் 31.08.2026-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழை, மரவள்ளி நடவு செய்துள்ள விவசாயிகள் 15.09.2026-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக Universal Sompo General Insurance Co. Ltd. நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கடைசி நாள்கள் அறிவிப்பு:
இம்மாவட்டத்தில் காரீப் பருவப் பயிர்களைக் காப்பீடு செய்ய ‘யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ்’ (Universal Sompo General Insurance Co. Ltd.) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயிர் வாரியாக காப்பீடு செய்ய வேண்டிய கடைசி நாள்கள் மற்றும் பிரீமியம் விவரங்கள் பின்வருமாறு:
- நெல்-1: ஏக்கருக்கு ரூ.764 பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய கடைசி நாள்: 31.07.2026.
- மணிலா (நிலக்கடலை): ஏக்கருக்கு ரூ.624.68 பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய கடைசி நாள்: 31.08.2026.
- கம்பு: ஏக்கருக்கு ரூ.252 பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய கடைசி நாள்: 31.08.2026.
- வாழை: ஏக்கருக்கு ரூ.725 பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய கடைசி நாள்: 15.09.2026.
- மரவள்ளி: ஏக்கருக்கு ரூ.507.06 பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய கடைசி நாள்: 15.09.2026.
பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் :
அடங்கல் 1435 பசலி (30.06.2026-க்கு முன் விதைப்பு / நடவு இருப்பின்) அல்லது 1436 பசலி அடங்கல் (01.07.2026-க்கு பின் நடவு / விதைப்பு இருப்பின்), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் எண்.
நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களை அறிய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும். எனவே, காரீப் பருவத்தில் நெல், நிலக்கடலை, கம்பு, வாழை மற்றும் மரவள்ளி பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















