BL Santhosh | "பேட்டி கொடுத்தா போதுமா" சீனியர்களுக்கு விழுந்த டோஸ், B.L.சந்தோஷ் வார்னிங் | NDA | BJP
பேட்டி கொடுக்குறது மட்டும்தான் உங்க வேலையா என தமிழக பாஜகவினரிடம் பி.எல்.சந்தோஷ் கறாராக பேசியதாக சொல்கின்றனர். தொகுதி பங்கீடோடு சேர்த்து அண்ணாமலை விவகாரத்தையும் நிர்வாகிகள் இழுத்த நிலையில் முக்கியமான ஆர்டர் ஒன்றை போட்டுள்ளார் பி.எல்.சந்தோஷ்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்டமாக சீட் ஷேரிங் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் இடம்பெற்றிருக்கும் கட்சிகள், இடம்பெறப்போகின்ற கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு முதல்முறையாக 4 இடங்களில் வென்ற பாஜக, இம்முறை அதைவிடவும் அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் நேற்று தமிழகம் வந்து தொகுதிப் பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டர். சென்னையில் நாடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய பி.எல்.சந்தோஷ் தமிழக பாஜகவினரை லெஃப்ட் அண்ட் ரைட்டு வாங்கியதாக சொல்கின்றனர். பேட்டி கொடுப்பது உங்கள் வேலை கிடையாது, பேட்டி கொடுத்தால் மட்டும் போதுமா, தேர்தல் பணிகளையும் களத்தில் இறங்கி தீவிரமாக பார்க்க வேண்டும் என்று கறாராக சொன்னதாக தெரிகிறது. அதேபோல் சீனியர்கள் தங்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் ஈகோவை மூட்டைகட்டி வைத்துவிட்டுஅந்தந்த தொகுதி நிர்வாகிகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், கடந்த லோக் சபா தேர்தலில் பெற்ற 11 சதவிகித வாக்குகளை முன்வைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை விட இடமடங்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்கவிருப்பதாகவும், அதற்கேற்றவாறு பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் தொகுதிகளை ஆய்வு செய்து லிஸ்ட் ஒன்றை தயார் செய்யுமாறு பி.எல்.சந்தோஷ் ஆர்டர் போட்டிருப்பதாகவும் பாஜக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
அதேபோல் தேர்தல் பணி பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியதை பற்றிய பேச்சும் இந்த கூட்டத்தில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் நடவடிக்கையால் கூட்டணிக்குள்ளும் கட்சிக்குள்ளும் சிக்கல் வர வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்கின்றனர். ஆனால் இதையெல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என பி.எல்.சந்தோஷ் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
பி.எல்.சந்தோஷ் தலைமையிலான கூட்டத்தில் பேசப்பட்ட வாதங்களை வைத்தும் பார்க்கையில், சட்டமன்றத் தேர்தலில் சுமார் 20 சதவிகித தொகுதிகளைக் கூட்டணியில் கேட்டுப்பெற பாஜக திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.























