’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இளைஞர் ஒருவர் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கக் கூடாது என்று அரசு அறிவித்திருக்கிறது. அப்படியிருக்கும்போது ஏன் கூடுதல் பணம் வாங்குகிறீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு டாஸ்மாக் ஊழியர்கள், “மேலிருந்து இதுவரை எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை” என்று பதிலளிப்பதும், இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
அரசின் எச்சரிக்கைக்கு பின்னரும் கூடுதல் தொகை வசூல் செய்யப்பட்டதாக வெளியான இந்த வீடியோ, மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















