Pakistan Demand to ICC |"இந்தியாவோட விளையாடுறோம் ஆனா 3 கண்டிஷன்" ஆட்டம் காட்டும் பாகிஸ்தான்
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கெதிரான போட்டியை புறக்கணிப்பதாகக் கூறியிருந்த பாகிஸ்தான் அணி, தற்போது இந்தியாவுடன் விளையாடுவதற்கு சில நிபந்தனைகளை ஐ.சி.சி-யிடம் முன்வைத்திருக்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை பிப்ரவரி 7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஐ.சி.சி தொடர்களில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய மற்றும் ஐ.சி.சி-க்கு அதிக வருமானம் ஈட்டித்தரக்கூடிய இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்த முறை நடைபெறுமா என்பது இன்னும் சந்தேகமாகவே இருக்கிறது.
முன்னதாக ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்தியா வீரர்கள் கைகுலுக்காததாலும், ஆசிய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கையால் கோப்பை வாங்க மறுத்ததாலும், இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறியது.
அதனால், பாகிஸ்தான் அணி ஆடும் போட்டிகளை ஐ.சி.சி இலங்கைக்கு மாற்றியது. இது சுமூகமாக முடிந்த வேளையில், வங்காளதேசத்தில் அரசியல் ரீதியாக நடந்த இந்து - முஸ்லிம் பிரச்னையால், ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணியிலிருந்து வங்களாதேச வீரரான முஸ்தாஃபிசூர் ரஹ்மானை வெளியேற்றியது பி.சி.சி.ஐ.
இதன்காரணமாக, ``இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எங்களுடைய போட்டிகள் இலங்கைக்கு மாற்றுங்கள்" என்று வங்களாதேச கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி-க்கு கோரிக்கையை வைத்தது. ஆனால், ஜெய்ஷா தலைமையிலான ஐ.சி.சி, வங்காளதேச அணியை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றி, ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்தது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே வங்காளதேசத்துக்கு ஆதரவுக்குரல் கொடுத்துவரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கெதிரான போட்டியைப் புறக்கணிக்கப்பதாக அறிவித்தது. அவ்வாறு நிகழந்தால் ஐ.சி.சி-க்கு நிச்சயம் வருமான இழப்பு ஏற்படக்கூடும்.
அதனால், ஐ.சி.சி பாகிஸ்தானை எச்சரித்தது. ஆனால், பாகிஸ்தான் தனது முடிவு மாற்றியதாக இல்லை.
இவ்வாறிருக்க, ஐ.சி.சி துணைத் தலைவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வரிய தலைவர் மற்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் லாகூரில் நேற்று கூட்டாக மீட்டிங் நடத்தினர்.
இந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கெதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஐ.சி.சி-க்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
(1) வங்காளதேசத்துக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும். (2) உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் வங்காளதேசத்துக்கான பங்கேற்புத் தொகையை அளிக்க வேண்டும். (3) இனிவரும் காலங்களில் ஐ.சி.சி தொடர்களை நடத்தும் உரிமைகளை வங்காளாதேசத்துக்கு வழங்க வேண்டும் ஆகிய 3 நிபந்தனைகளை பாகிஸ்தான் முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், (1) ஐ.சி.சி வருவாயில் தங்களுக்கான வருவாய் பகிர்வை அதிகரிக்க வேண்டும். (2) இந்தியாவுடனான இருதரப்பு தொடர்களை மீண்டும் நடத்த வேண்டும். (3) போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் கைகுலுக்கும் நெறிமுறைகளைக் கொண்டு வரவேண்டும் ஆகிய நிபந்தனைகளையும் பாகிஸ்தான் முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுபற்றி ஐ.சி.சி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு முடிவும் வெளியாகவில்லை. விரைவில் இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.























