paranjith on film awards| திரைப்பட விருதுகள் அறிவிப்பு! ”நேர்மையா நடக்குதா”அரசுக்கு பா.ரஞ்சித் கேள்வி
திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசை நோக்கி கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித். அதேபோல் பல வருடங்களாகக் கிடப்பில் போட்டு மொத்தமாக வழங்குவதால் நல்ல படங்கள் கவனிக்கப்டாமல் போவதாக சுரேஷ் காமாட்சியும் விமர்சித்துள்ளார்.
2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்குச் சிறப்புப் பரிசாக ரூ.1.25 லட்சமும் வழங்கப்படும். சிறந்த படங்களாக 2016ல் மாநகரமும், 2017ல் அறமும், 2018ல் பரியேறும் பெருமாளும், 2019ல் அசுரனும், 2020ல் கூழாங்கல்லும், 2021ல் ஜெய்பீமும், 2022ல் கார்கியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசை விமர்சித்து இயக்குநர் பா.ரஞ்சித் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது பதிவில், ‘2014 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி! அதில் மாநாடு படத்திற்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2019 இல் வெளியான மிக மிக அவசரம் படம் தேர்வாளர்களின் பார்வையில் படாமல் போனது ஏனோ?! சமூகம் சார்ந்து பெண் போலீசாரின் அவஸ்தையை கருணையோடு அணுகிய படம் கண்ணை மறைத்துவிட்டது போலும். ஒருவேளை தமிழக அரசு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வந்திருந்தால் பார்வைக்கு கிடைத்து விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். இப்படி பல வருடங்களாகக் கிடப்பில் போட்டு மொத்தமாக வழங்குவதால் கூட கண்ணில் படாமல் போயிருக்கலாம். நல்ல படங்கள் இப்படித்தான் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. சமூகம் சார்ந்த ஒரு நல் முயற்சியை விருதுப்பட்டியலில் விடுபட வைத்த தேர்வுக்குழுவினருக்கும்.. தமிழக அரசுக்கும் என் வாழ்த்துகள்” என விமர்சித்துள்ளார்.






















