Puducherry Lake : கோடை வெயில் தனிக்கனுமா ! கண்ணுக்கு எட்டிய தூரம் கடல் ; கண்டிப்பா இங்க போகணும் !
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேலே பறக்கும் அழகிய பறவைகள், அழகிய படகுப்பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும்.

ஊசுடு ஏரி ( Osudu Lake pondicherry )
ஊசுட்டேரி ஏரி புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பகுதிகளில் அமைந்துள்ள ஒரு ஏரி ஆகும். ஊசுடு என்ற கிராமத்தில் அமைந்திருப்பதால் இந்த ஏரி ஊசுடு ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி 800 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இதில் 390 ஹெக்டேர் புதுச்சேரியிலும் மீதமுள்ள பகுதிகள் தமிழ்நாட்டிலும் உள்ளது. இது புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரி ஆகும்.
புதுச்சேரியில் ஆண்டு முழுவதும் பெருக்கெடுக்கும் ஜீவநதிகளோ, தண்ணீரைத் தேக்கி வைத்து பயன்படுத்தும் வகையில், பிரம்மாண்டமான அணைக்கட்டுகள் தற்போதுவரை இல்லை. கடைமடைப் பகுதியான புதுச்சேரியில் 84 ஏரிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவை குடிநீர் விநியோகத்துக்கும், விவசாயப் பணிகளுக்கும் அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய பழம்பெருமை வாய்ந்த ஏரியாகத் திகழ்வது ஊசுடு ஏரி. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும், கால்வாய்களும் கட்டினார் என்று திருவக்கரைக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ., ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.275 கி.மீ., மொத்தக் கொள்ளளவு 540 மில்லியன் கன அடி. ஊசுடு ஏரிக்கு, சங்கராபரணி ஆறு மற்றும் வீடூர் அணையில் இருந்து நீர் வருகிறது. மேலும், சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்து ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர் ஆகும்.
கடல்போல் காட்சியளிக்கும் ஏரி
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேலே பறக்கும் அழகிய பறவைகள், அழகிய படகுப்பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும். இந்த ஏரி, புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்குகிறது. "ஊசுடு ஏரி புதுச்சேரி, தமிழகத்தில் விழுப்புரம் பகுதியில் பரவியுள்ளது. 2008-ல் புதுச்சேரி அரசும் 2014-ல் தமிழக அரசும் ஊசுடு ஏரியைப் பறவைகள் சரணாலயமாக அறிவித்தன.
ஊசுடேரிக்கு வரும் பறவைகளின் வகைகள் :
பூநாரை, நத்தை குத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, உண்ணிக்கொக்கு, கரண்டிவாயன், குள்ளத்தாரா, காட்டு வாத்து, பட்டைத்தலை வாத்து, கருநீர்க்கோழி, சாதாரண மைனா, நீலச்சிறகி, அன்னம், வெண்தலை சிலம்பன்(பன்றிக்குருவி), குளத்துக் கொக்கு, தட்ட வாயன், ஊசிவால் வாத்து, சாம்பல் கூழைக்கடா, குயில்.
படகு சவாரி
சதுப்பு நிலத்தை சுற்றிப்பார்க்க சிறந்த வழி, 30 நிமிட சவாரிக்கு தலா ரூ.100, 40 நிமிட சவாரிக்கு ரூ.180, பெடல் படகில் 4 பேர் சவாரி செய்ய 30 நிமிடத்திற்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்ட சவாரி செய்தாலும் சரி, சிறிது தூரம் பயணம் செய்தாலும் தாமரை சதுப்புநில மரங்களின் இயற்கை அழகை ரசிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

