மண் கடத்தி வருவதாக லாரியை சிறைப்பிடித்த ஊர் மக்கள் - கரூரில் பரபரப்பு
பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் எந்த இடத்திலும் மண் அல்ல விட மாட்டோம். மேலும், மிகப் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கடைவீதி பகுதியில் கிராவல் மண் கடத்தி வருவதாக லாரியை ஊர் பொதுமக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக கிராவல் மணல் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்களால் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக கரூர், உப்பிடமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக கிராவல் மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், இன்று உப்பிடமங்கலம் கடைவீதி பகுதியில் கிராவல் மணல் ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் லாரியை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தனர். லாரி ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், அவர் வைத்திருந்த பர்மீட்டில் காக்காவடியில் கிராவல் மண் அள்ளப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம் என்று அனுமதி இருந்தது. ஆனால், காக்காவடியில் கிராவல் மண் அள்ளப்படாமல், உப்பிடமங்கலம் அடுத்துள்ள மாணிக்கபுரம் என்ற கிராமத்தில் கிராவல் மண் எடுத்து வரப்படுவது தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், லாரியை சிறைப்பிடித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், கிராவல் மண் அள்ளுவதற்கான பர்மிட் ரசீதை ஆய்வு செய்த பின் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இன்றி பல இடங்களில் கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த லாரி பல மாதங்களாக காக்காவடி பகுதியில் மணல் அள்ளப்படுவதாக பர்மிட் வாங்கிக் கொண்டு, சட்ட விரோதமாக உப்பிடமங்கலம் அடுத்துள்ள மாணிக்கபுரம் என்ற இடத்தில் மண்ணை அள்ளி கொண்டு செல்கின்றனர்.
மாணிக்கபுரம் பகுதியில் அதிக அளவிலான பச்சை கற்கள் புதைந்து உள்ளதாக தகவல் உள்ளது. அந்தக் கற்களை அல்லவே மேம்போக்கான பர்மிட் வாங்கிக் கொண்டு இங்கு மண்ணை எடுத்து செல்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இந்த பகுதியில் எந்த இடத்திலும் மண் அல்ல விட மாட்டோம். மேலும், மிகப் பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

