ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! கோவை-ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் சேவை மார்ச் வரை நீட்டிப்பு.முன்பதிவு தொடக்கம்!
சேலம் வழியாக செல்லும் கோவை-ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன் பதிவு தொடங்கியுள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது சேலம் வழியாக செல்லும் கோவை-ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன் பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், கோவையிலிருந்து ஈரோடு, சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலின் இயக்க காலம் நடப்பு வாரத்தோடு முடிவடையும் நிலையில் அடுத்த மாதம் (மார்ச்) வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, கோவை-ஜெய்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-06181) வருகிற 26-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 5, 12, 12,19,26-ந் தேதி (வியாழக்கிழமை தோறும் ) இயக்கப்படுகிறது. கோவையில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 5:10 மணிக்கு வந்தடையும். அதன் பிறகு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கர்நூல்சிட்டி, குடா, நான்டெட், நசிராபாத், அஜ்மீர் வழியாக ஜெய்பூருக்கு சனிக்கிழமை மதியம் 1.25 மணிக்கு சென்றடைகிறது.

அதேபோல், மறுமார்க்கத்தில் ஜெய்ப்பூர்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்-06182) அடுத்த மாதம் 1, 8, 15, 22, 29-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் இரவு 10.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு புதன்கிழமை அதிகால 3:50 மணிக்கு வந்தடையும். அதன் பிறகு ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு காலை 8.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது. எனவே இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.























