பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் பண்டிகையையொட்டி , சென்னையில் இருந்து திருநெல்வேலி , கோவை உட்பட பல்வேறு இடங்களுக்கு , பத்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் இருந்து ஜனவரி 11, 18 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் கோவை - சென்னை விரைவு ரயில் (எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19 ஆகிய திங்கள்கிழமைகளில் இரவு 11.25 மணிக்குப் புறப்படும் சென்னை - கோவை விரைவு ரயில் (எண்: 06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயிலானது போத்தனூரில் இருந்து ஜனவரி 13, 20 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 12.35 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06024) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 14, 21 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06023) இரவு 11.15 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

மங்களூரு - சென்னை இடையே சிறப்பு ரயிலானது கா்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து ஜனவரி 13-ஆம் தேதி அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06126) அன்று இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, சென்னையில் இருந்து ஜனவரி 14-ஆம் தேதி காலை 4.15 மணிக்குப் புறப்படும் சென்னை - மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06125) இரவு 11.30 மணிக்கு மங்களூரு நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
செங்கோட்டை - போத்தனூா் இடையே சிறப்பு ரயிலானது செங்கோட்டையில் இருந்து ஜனவரி 14-ஆம் தேதி இரவு 8.45 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06026) மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலானது தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூா், பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது





















