உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் துணை கேப்டன் ஷஷாங்க் சிங் உள்நாட்டு கிரிக்கெட்டில் சத்திஸ்கர் அணியிலிருந்து விலகி அடுத்த உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர் சீசனில் புதுச்சேரி அணியில் ஆடவிருக்கிறார்!

புதுச்சேரி: ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் துணை கேப்டன் ஷஷாங்க் சிங் உள்நாட்டு கிரிக்கெட்டில் சத்திஸ்கர் அணியிலிருந்து விலகி அடுத்த உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர் சீசனில் புதுச்சேரி அணியில் ஆடவிருக்கிறார்.
7 ஆண்டு கால பயணம் நிறைவு:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாகச் செயல்பட்டு வரும் முன்னணி ஆல்ரவுண்டர் ஷஷாங்க் சிங், உள்நாட்டு கிரிக்கெட்டில் சத்தீஸ்கர் அணியில் இருந்து விலகி, வரவிருக்கும் புதிய சீசனில் புதுச்சேரி அணிக்காக விளையாடத் தீர்மானித்துள்ளார். சத்தீஸ்கர் அணிக்காக கடந்த 7 ஆண்டுகளாக விளையாடி வந்த ஷஷாங்க் சிங், அந்த அணிக்காக 24 முதல்தரப் போட்டிகளில் (First-Class) பங்கேற்று 29.19 சராசரியுடன் 905 ரன்களை எடுத்துள்ளார்.
அவரது 'லிஸ்ட் ஏ' (List A) ஒருநாள் போட்டிப் புள்ளிவிவரங்கள் மிகவும் சிறப்பானவையாக உள்ளன. 31 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 40.30 சராசரி மற்றும் 111.95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 927 ரன்களைக் குவித்ததுடன் 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், சத்தீஸ்கர் அணிக்காக 42 டி20 போட்டிகளில் களமிறங்கி 129.30 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 653 ரன்கள் எடுத்து, 18 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் எழுச்சியும் சவால்களும்:
ஐபிஎல் 2024 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு சிறந்த ஃபினிஷராக உருவெடுத்த ஷஷாங்க் சிங், 164.65 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் 354 ரன்களைக் குவித்து அசத்தினார். பெரும்பாலான போட்டிகளில் 5 மற்றும் 6-வது வரிசைகளில் களமிறங்கி இவர் காட்டிய அதிரடி ஆட்டம், மெகா ஏலத்திற்கு முன்பாகவே பஞ்சாப் அணி இவரைத் தக்கவைக்கக் காரணமாக அமைந்தது.
தொடர்ந்து 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்ததில் முக்கியப் பங்காற்றிய போதிலும், ஃபார்ம் இழப்பு, தவறவிட்ட கேட்சுகள் மற்றும் காயம் காரணமாக அந்த சீசனில் அவர் சில சவால்களைச் சந்திக்க நேரிட்டது.
தனது புதிய மாற்றம் குறித்துப் பேசிய ஷஷாங்க் சிங், "புதுச்சேரி அணிக்கு மாறுவது எனக்கு ஒரு புதிய தொடக்கம். காயங்களில் இருந்து முழுமையாக மீண்டுள்ள நிலையில், லிமிட்டெட் ஓவர் 'ஒயிட்-பால்' கிரிக்கெட்டில் எனது பழைய திறமையை மீண்டும் நிரூபிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு" என நம்பிக்கை தெரிவித்தார்.
சத்தீஸ்கர் கிரிக்கெட் சங்கத்துடன் அதிருப்தி:
சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தன்னைச் சரியாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த ஷஷாங்க் சிங், வேறு மாநிலத்திற்கு மாற ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ் (NOC) கோரி விண்ணப்பித்தார். அதனை ஏற்றுச் சங்கமும் என்.ஓ.சி வழங்கியுள்ளது.
நிர்வாகத்துடனான பிரச்சினை குறித்து கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
"நிர்வாகத்திற்கும் எனக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. ஐபிஎல் சீசன் முடிந்தவுடனேயே மாநிலச் சங்க அதிகாரிகளிடம் பேச முயன்றேன்; ஆனால் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
2026 சத்தீஸ்கர் கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடரில் நான் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கோ, மாநில அணிக்கான பயிற்சி முகாமில் (Conditioning camp) எனது பெயர் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பதற்கோ அவர்களிடம் எந்த விளக்கமும் இல்லை.
எனக்கு எந்த ஒரு சிறப்புச் சலுகையும் தர வேண்டும் என நான் கேட்கவில்லை. ஆனால், 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறந்த உள்நாட்டு 'ஒயிட்-பால்' ஆல்ரவுண்டருக்கான பிசிசிஐ (BCCI) விருதை வென்ற ஒரு வீரருக்கு, கேலி-கிண்டல்கள் இல்லாமல் குறைந்தபட்சம் என்ன நடக்கிறது என்ற தெளிவான விளக்கமாவது கிடைத்திருக்க வேண்டும்."
இவ்வாறு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஷஷாங்க் சிங், வரவிருக்கும் உள்நாட்டுச் சீசனில் புதுச்சேரி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















