Vaibhav Sooryavanshi: அடிச்சா சிக்ஸரு..! U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மின்னல் வேக சதம் அடித்த சூர்யவன்ஷி!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றனர்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டி:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்காக ஆரோன் ஜார்ஜ் - வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கைத் தொடங்கினர். அரையில் சதம் விளாசிய ஆரோன் ஜார்ஜ் 9 ரன்னில் அவுட்டாக, அடுத்து கேப்டன் ஆயுஷ் மாத்ரே - வைபவ் சூர்யவன்ஷி ஜோடி சேர்ந்தனர்.
சிக்ஸர் மழை:
இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினார். சூர்யவன்ஷி டி20 போட்டி போல ஆடினார். அவருக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே ஒத்துழைப்பு அளித்தார். ஆயுஷ் மாத்ரே ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாச, சூர்யவன்ஷி சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார்.
இந்த ஜோடியை பிரிக்க செபாஸ்டியன் மோர்கன், அலெக்ஸ் கிரீன், லும்ஸ்டன், மின்டோ, ஃபர்கான் அகமது, ஆல்பர்ட் என பலரையும் அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரே மாறி, மாறி பயன்படுத்தினார். ஆனால், மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைத்தது.
55 பந்துகளில் சதம்:
சிறப்பாக ஆடிய சூர்யவன்ஷி அரைசதம் விளாசினார். மறுமுனையில் கேப்டன் ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசி அவுட்டானார். அவர் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 53 ரன்களுடன் அவுட்டானார்.
ஆனாலும், மறுமுனையில் அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி சதம் விளாசினார். அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 8 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும். சூர்யவன்ஷியின் அபார சதத்தால் இந்திய அணி 20 ஓவர்களிலே 200 ரன்களை கடந்து ஆடி வருகிறது. தொடர்ந்து அபாரமாக ஆடி வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரி 15 சிக்ஸருடன் 175 ரன்கள் எடுத்து கடைசியில் அவுட்டானார். இந்திய அணி 25.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
மிரட்டல் பேட்டிங்:
சூர்யவன்ஷி அடித்த பல சிக்ஸர்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்றது. 2011ம் ஆண்டு பிறந்த சூர்யவன்ஷியின் அபாரமான பேட்டிங் திறமையை கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை அணியில் ஏலத்தில் எடுத்தது. வெறும் 14 வயதே ஆன அவரை ஏலத்தில் எடுத்தபோது பலரும் ஆச்சரியப்பட்டனர். கடந்த ஐபிஎல் தொடரிலே அவர் குஜராத் அணிக்கு எதிராக சதம் விளாசி தன்னை ஏலத்தில் எடுத்ததன் காரணத்தை அனைவருக்கும் உணர்த்தினார்.
தொடர்ந்து அபாரமாக ஆடி வந்த அவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக பிசிசிஐ மாற்றியது. இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த சூர்யவன்ஷி தனது முதல் சதத்தை இன்று விளாசியுள்ளார். அதுவும் அதிரடி சதமாக மாற்றி அணிக்கு பக்கபலமாக உள்ளார்.




















