RCB Vs GG WPL 2025: ஆர்சிபிசி-ன்னலே அடி தான்..! ரன் மழை, குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வரலாற்று வெற்றி - சேஸிங்கில் சாதனை
RCB Vs GG WPL 2025: நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் போட்டியிலேயே, பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

RCB Vs GG WPL 2025:மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இதுவரை இல்லாத அளவிலான, அதிகபட்ச சேஸிங்கை பெங்களூர் அணி நிகழ்த்தியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் 2025:
நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 5 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. வதோத்ராவில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியனா, பெங்களூர் அணியை குஜராத் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குஜராத் மிரட்டல் பேட்டிங்:
அதன்படி, தொடக்க வீராங்கனையான பெத் மூனி பெங்களூர் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்கு உறுதுணையாக கேப்டன் ஆஷ்லே கார்ட்னர், தனது பங்கிற்கு பட்டாசாய் வெடித்தார். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பெங்களூர் அணி திணறியது. இறுதிகட்டத்தில் டாட்டின் அபாரமான ஃபினிஷிங்கை தந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 37 பந்துகளில் 79 ரன்களை குவித்தார். பெத் மூனி 42 பந்துகளிகல் 56 ரன்களையும், டாட்டின் 13 பந்துகளில் 25 ரன்களையும் குவித்தனர்.
திருப்பி அடித்த ஆர்சிபி
இமாலய இலக்கை எட்ட முடியுமா என்ற பெரும் கேள்வியுடன் பெங்களூர் அணி களமிறங்கியது. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா வெறும் 9 ரன்களிலும், டேனி வ்யாட் ஹோட்ஜ் 4 ரன்களிலும் நடையை கட்டினர். இதனால் 14 ரன்களை சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி தடுமாறியது. இருப்பினும் 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் ராகவி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசி, ஸ்கோரை உயர்த்தினர். பெர்ரி 34 பந்துகளில் 57 ரன்களையும், ராகவி 27 பந்துகளில் 25 ரன்களையும் சேர்த்து அணியின் சேஸிங்கை வலுப்படுத்தினர்.
சேஸிங்கில் புதிய சாதனை:
அவர்களை தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அஹுஜா மைதானத்தின் வாணவேடிக்கை செய்து காட்டினர். குஜராத்தின் பந்துவீச்சை ஊதித்தள்ளினர். நாலாபுறமும் பந்து அடித்து விரட்டப்பட்டது. அதன் விளைவாக 18.3 ஓவர்கள் முடிவிலேயே பெங்களூர் அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ரிச்சா கோஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 64 ரன்களையும், கனிகா 13 பந்துகளில் 30 ரன்களையும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.மேலும், மகளிர் பிரீமியர் லீக்கின் வரலாற்றிலேயே அதிகபட்ச சேஸிங் என்ற சாதனையையும் பெங்களூர் அணி படைத்துள்ளது.
புதிய சாதனைகள்:
WPL வரலாற்றில் 200-க்கும் அதிகமான இலக்கு சேஸ் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஒரு போட்டியில் இரு அணிகளும் சேர்த்து எடுத்த அதிகபட்ச ரன்னும் (403 ரன்கள்) இதுதான். ரிச்சா கோஷ் மற்றும் கனிகா கூட்டணி, 37 பந்துகளில் 93 ரன்களை சேர்த்து, அதிவேகமாக 50 ரன்களை சேர்த்த ஜோடி பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

