Thaipusam 2025 : “கைகளில் கற்பூரம் ஏந்தி அரோகரா முழக்கம்” பழனியில் களைக்கட்டிய தைப்பூச பெருவிழா..!
Palani Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழாவான இன்று அதிகாலை சூரிய தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சூடம் ஏந்தி அரோகரா கோசத்துடன் சூரிய பகவானை வணங்கி வழிபாடு செய்தனர்.

தைப்பூசத் திருவிழா கடந்த 5ம்தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது .தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி -வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மணமேடையில் முத்துக்குமாரசுவாமி - வள்ளி தெய்வானைக்கு பால், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் வழங்க, ஓதுவார்கள் திருமறைகள் பாட முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர். தைப்பூச விழா தேரோட்டம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது . தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மலைக் கோயிலில் பக்தர்கள் விரைவில் சாமி தரிசனம் செய்து வர வசதியாக மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கட்டணமின்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் 3500போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இன்று தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பழனிக்கு பாதயாத்திரை ஆக வந்த வண்ணம் உள்ளனர். மலை அடிவாரத்தில் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடி உற்சாகமாக தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். தைப்பூச திருவிழா இன்று அதிகாலை சண்முக நதி இடுமன்குளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய பகவானை வணங்கியும் , கைகளில் சூடம் ஏற்றியும் அரோகரா, அரோகரா என்ற கோசத்துடன் வழிபட்டு வருகின்றனர்.
மேலும் ஆண்களும், பெண்களும் முருகன் பக்தி பாடல்களை பாடியபடி கிரிவலம் வந்து மலை மீது சாமி தரிசனம் செய்யச் செல்கின்றன. பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதா சாமி தரிசனத்திற்கு மலை மீது செல்லக்கூடிய பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது. பக்தர்களின் கூட்டத்தை போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தி பிரித்து பிரித்து அனுப்பி வைக்கின்றனர். யானை பாதை வழியாக தரிசனத்திற்கு பக்தர்கள் மலை மேலே அனுமதிக்கப்பட்டு, தரிசனம் முடித்த பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கிச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர். மலை மீது பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் மூன்று முதல் ஐந்துமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் மாலையில் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் ஆங்காங்கே காத்திருக்கின்றனர். திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம், செய்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பழனிக்கு பாதயாத்திரை ஆக வந்த பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்காக பழனியில் இருந்து தமிழகம் முழுவதும் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

