Rajinikanth: “காலம் பதில் சொல்லும்” .. ஆதவ் அர்ஜூனா சர்ச்சை பேச்சு.. கொந்தளித்த ரஜினி!
Rajinikanth on Aadhav Arjuna: சென்னையில் சில தினங்களுக்கு நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு திமுகவின் மிரட்டல் காரணம் என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.

நான் அரசியலுக்கு வராததற்கு திமுகவின் மிரட்டல் தான் காரணம் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு திமுக மிரட்டல் - ஆதவ் அர்ஜூனா
சென்னையில் சில தினங்களுக்கு நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு திமுகவின் மிரட்டல் காரணம் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவருக்கு வீடியோ மூலம், போஸ்டர் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனிடையே திமுக தரப்பில் இந்த கருத்துக்கு பெரிய அளவில் எதிர்வினை எதுவும் வரவில்லை.
ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, ஜான் பாண்டியன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தமிழக அரசியலில் முதல்முறையாக களம் காணும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு பெரும் பின்னடைவாக அமைந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்த நிலையில், விஜய் அரசியலில் வந்ததை ரஜினி ரசிகர்கள் வரவேற்றிருந்தனர். ஆனால் ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
காலம் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
இப்படியான நிலையில் ரஜினி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.
— Rajinikanth (@rajinikanth) March 17, 2026
அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!!” என அதில் ரஜினி தெரிவித்துள்ளார்.
பிரச்னைகளுக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிலையில் ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இதற்கு என்ன மாதிரியான பதில் வரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















