Thaipoosam 2026: ஓம் முருகா.. இன்று தைப்பூசம்! அலைகடலென கோயில்களில் திரளும் பக்தர்கள்!
முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. முருகன் கோயில்களில் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தை மாதத்தில் பெளர்ணமி திதியில் வரும் பூச நட்சத்திரமான தைப்பூசம் முருகனுக்கு மிக மிக உகந்த நாள் ஆகும். இதை முருக பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
தைப்பூசம்:
நடப்பாண்டிற்கான தைப்பூசம் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக முருகன் ஆலயங்களில் கடந்த 26ம் தேதியே கொடியேற்றப்பட்டுவிட்டது. இன்று தைப்பூசம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கோயில்களில் திரளாக குவியத் தொடங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பரவசத்தில் பக்தர்கள்:
அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் கடந்த சில தினங்களாகவே அலைமோதி வருகிறது. நேற்று முதல் இந்த கூட்டம் பல மடங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தைப்பூசம் என்றாலே மிகவும் பிரிசித்தி பெற்றது பழனி முருகன் கோயில். பழனி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காவடி, பாத யாத்திரை:
லட்சக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி உள்பட பல்வேறு காவடிகளை எடுத்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
அறுபடை வீடுகள் மட்டுமின்றி புகழ்பெற்ற முருகன் கோயில்களான சிக்கல் சிங்கார வேலர் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மருதமலை முருகன் கோயில் என அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் களைகட்டி காணப்படுகிறது. இந்த கோயில்களில் எல்லாம் சிறப்பு தரிசனமும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது.
பல கிலோமீட்டர் காத்திருக்கும் பக்தர்கள்:
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. வடபழனியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு புறமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பல கோயில்களில் பக்தர்களுக்கான சிறப்பு அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற ஏராளமான முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று பெளர்ணமி என்பதால் திருவண்ணாமலையிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
சிறப்பு பேருந்துகள்:
தமிழ்நாட்டில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் கோயில்களில் அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகப்புகழ்பெற்ற மலேசியா முருகன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் காலை முதல் தைப்பூசம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















