சேலமே ஆன்மீகக் கடலில் மூழ்கியது! - சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேரோட்டம் கோலாகலம்
சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாகம் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாகம் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் சுகவனேஸ்வரர் மற்றும் சொண்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் மற்றும் தினமும் மாலை நேரத்தில் திருவீதி உலா என பல்வேறு வைபவங்கள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை ஒட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் சுகனேஸ்வரருக்கும் சொர்ணாம்பிகை தாயாருக்கும் பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் அதிகாலை முதல் நடைபெற்றது. இதனை அடுத்து ராஜகணபதி கோவில் முன்பு உள்ள தேரில் வண்ண மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க திருத்தேரோட்டம் தொடங்கியது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் நமச்சிவாயா நமச்சிவாய என கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரானது ராஜகணபதி கோவில் தொடங்கி இரண்டாவது அக்ரஹாரம், சின்ன கடைவீதி, முதல் அக்ரஹாரம் வழியாக பவனி வந்து மீண்டும் ராஜ கணபதி கோவில் அருகே வந்தடைந்தது. இதனை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















