Maha Shivaratri 2026: மகா சிவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்.. இவ்வளவு பலன்களா?
மகா சிவராத்திரி நாளில் நாம் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சில மந்திரங்களை உச்சரிப்பது நல்லது என சொல்லப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானுக்குரிய மகா சிவாரத்திரி வரும் பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்றைய நாளில் நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
மகா சிவாரத்திரி
இந்து மதத்தில் சிவபெருமான் முதன்மை கடவுளாக அறியப்படுகிறார். மும்மூர்த்திகளில் ஒருவரான அவர் அழித்தல் தொழிலை செய்கிறார். படைத்தல் தொழிலை பிரம்மாவும், காத்தல் தொழிலை விஷ்ணுவும் செய்யும் நிலையில் பலரும் சிவபெருமான் மேற்கொள்வது உயிர்களை அழிக்கும் தொழில் என நினைத்து வருகின்றனர். ஆனால் முற்பிறவியிலும், இப்பிறவியிலும் நாம் செய்த பாவங்களை எல்லாம் போக்கி நம்மை நல்வழிப்படுத்தி எதிர்கால சந்ததியினர் புண்ணியம் பெற்று திகழ அவரே காரணமாக உள்ளார். இத்தகைய சிவபெருமானுக்கு மாதம் தோறும் சிவராத்திரி கொண்டாடப்பட்டாலும், மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மகா (பெரிய) சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.
இதற்கு பின்னால் பல புராண காரணங்கள் சொல்லப்பட்டாலும், விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் ஏற்பட்ட அகந்தையை ஒழிக்க சிவபெருமான் ஒரு சோதனை ஒன்றை மேற்கொண்டார். அதன்பொருட்டு அடி முடி கூட அறியா வண்ணம் அவர் ஜோதி பிழம்பாக தோன்றினார். இது மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
2026 மகா சிவராத்திரி தேதி
2026ம் ஆண்டு மகா சிவராத்திரி மாசி மாதத்தின் 3ம் நாளான பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி முதல் பிப்ரவரி 16ம் தேதி அதிகாலை 6 மணி வரையிலான 12 மணி நேரம் நான்கு யாம காலமாக பிரிக்கப்பட்டு சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, சிவாலய ஓட்டம் ஆகியவை நடைபெறும். இந்த நாளில் சிவ பக்தர்கள் வீட்டிலும், அல்லது கோயிலுக்கு சென்றும் விரதமிருந்து வழிபடுவார்கள். இதனால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
அத்தகைய மகா சிவராத்திரி நாளில் நாம் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சில மந்திரங்களை உச்சரிப்பது நல்லது என சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி, சிவனின் மூல மந்திரமான “ஓம் நமசிவாய” கண்டிப்பாக உச்சரிக்க வேண்டும். தொடர்ந்து மகாமிருத்யுஞ்சய மந்திரமான “ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்” அதனை தெரிவிக்கலாம். நீலகண்ட மகாதேவ மந்திரமான “ஓம் நமோ நீலகண்டாய”, ருத்ர காயத்ரி மந்திரமான “ஓம் தத்புருஷாய வித்மஹே.. மகாதேவாய தீமஹி.. தன்னோ ருத்ர ப்ரசோதயாத்” என கூறலாம்.
தொடர்ந்து தட்சிணாமூர்த்தி சிவ மந்திரமான, “ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்யே.. மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞம் ப்ரயச்ச ஸ்வாஹா”.. மிருத்யுஞ்சய மகாதேவ மந்திரமான “ஓம் மிருத்யுஞ்சய மஹாதேவாய த்ராஹிமாம் ஷரணாகதம்... ஜன்ம மிருத்யு ஜரா வ்யாதிபிடைடம் கர்மா பந்தனாய” ஆகியவ்ற்றை உச்சரிக்க வேண்டும். இதனை சொல்வதால் நாம் வாழ்க்கையில் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கி இனிமையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை கிடைக்க சிவபெருமான் அருள் புரிவார் என்பது ஐதீகமாகும்.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. ஏபிபி நாடு பொறுப்பேற்காது)























