மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்... புராண வரலாறு இதுதான்...!
மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான திருவெண்காடு நந்தி பகவானின் மேனியில் இன்றும் அந்த காயத்தின் தழும்புகள் காணப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் சித்திரை மாத பிரதோஷ சிறப்பு வழிபாடில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற சிவாலயம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

மேலும் பல சிறப்புகள்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.
வோவ்…. 20 வருடங்களுக்கு பிறகு குட் நியூஸ்! விமான நிலையத்தில் இருந்து பேருந்து வசதி! எங்கெல்லாம்?
மருத்துவா சூரனால் தாக்குதலுக்கு உள்ளான நந்தி பகவான்
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உள்ள நந்தி பகவான் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான வடுக்கள் காணப்படுகின்றன. முன்பு ஒரு காலத்தில் மருத்துவா சூரன் என்ற அசுரன் தனது தவ வலிமையால் சிவபெருமானிடம் காட்சி பெற்று சூலாயிரத்தை பெற்றார். தொடரும் அந்த சூலாயுதத்தால் தேவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினான். அப்போது நந்தி பகவான் சென்று மருத்துவர சூரனிடம் முறையிட்ட போது மருத்துவா சூரன் சூலாயத்தால் நந்தி பகவானையும் தாக்கியதாக புராண வரலாறு. அந்த சூலாயத்தால் தாக்கப்பட்ட வடுக்கள் தற்போது இக்கோயிலில் உள்ள நந்தி சிலையின் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நந்தி பகவானுக்கு சித்திரை மாத பிரதோஷத்தை ஒட்டி மா பொடி, மஞ்சள், திரவியப்பொடி, பால்,தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம்,பழச்சாறு முதலான நறுமண வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் பல்லக்கு வாகனத்தில் கோயில் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வீதி உலாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர். பிரதோஷ பூஜைகளை வினோத் குருக்கள் செய்து வைத்தார்.






















