மேலும் அறிய
பழனி கோயில் நிதி: ரூ.162 கோடி புதிய திட்டங்கள்? கோயில் நிதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற எதிர்ப்பு !
பழனி கோயில் நிதி ரூ.162.54 கோடியில் 11 பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இ-டெண்டர் அறிவிப்பு விடுத்த வழக்கு விசாரணை.

பழனி கோயில்
Source : whatsapp
கோயில் நிதியை வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது சட்டவிரோதம். தற்போதைய நிலை தொடர வேண்டும் - ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், ஆய்வு நடத்தி ஜூன் 6-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவு.
பழனி கோயிலில் இ-டெண்டர் அறிவிப்பு
சென்னையைச் சேர்ந்த வினோத் ராகவேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், பழனி கோயில் நிதி ரூ.162.54 கோடியில் 11 பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஜனவரி முதல் பிப்ரவரி வரை பழனி கோயிலில் இ-டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இந்த டெண்டரில் பழனி கோயிலில் கூடுதல் பக்தர்கள் வரிசை வளாகம், பிரசாதம் தயாரிக்கும் இடம் புதுப்பித்தல், சேதமடைந்த நிலையில் உள்ள கந்தன் இல்லம், கடம்பன் இல்லம், இடும்பன் குடிலை அகற்றுவது மற்றும் புதிய தங்கும் விடுதிகள் கட்டுதல், பழனியாண்டவர் கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கம், விடுதி வளாகம் கட்டுதல், பக்தர்கள் ஓய்வறை கட்டுதல், கல்லூரிக்கு தேவையான பொருட்களை வாங்குதல், கூடுதல் வசதிகளுடன் பிரதான கட்டடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. கோயில் நிதியை வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது சட்டவிரோதம். தற்போதுள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளை அகற்றிவிட்டு புதிய விடுதி கட்டுவதற்கு ரூ.45.63 கோடியில் ஏற்கெனவே டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ரூ.72.45 கோடியில் புதிதாக பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட இன்னொரு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெண்டர்கள் ரகசியமாக வைக்கப்பட்டு குறுகிய காலத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. டெண்டர் ஆவணங்களை கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே பழனி கோயில் நிதி ரூ.162 கோடியில் 11 பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுரை அரசாணையை செயல்படுத்த தடை விதித்தும், அரசாணை அடிப்படையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
பின்னர் நீதிபதிகள் பழனி கோயில் நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளில் தற்போதைய நிலை தொடர வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், பழனி கோயிலில் தற்போதுள்ள விடுதிகள் இடிக்கப்பட்டு புதிய விடுதி கட்டப்பட வேண்டுமா? என்பது தொடர்பாக ஆய்வு நடத்தி ஜூன் 6-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























