![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலய விழாவில் பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்
ஸ்ரீ மாரியம்மன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடனை செய்தனர்
![கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலய விழாவில் பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன் Karur Sri Mariamman temple festival large number of areas devotees participation - TNN கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலய விழாவில் பக்தர்கள் பால்குடம் நேர்த்திக்கடன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/fb03ce733367218455f110065efad4d11716189053448113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஏராளமான பகுதியில் இருந்து பொதுமக்கள் தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செய்தனர்.
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் ஆலய வைகாசி பெருந்திருவிழா கடந்த வாரம் கம்பம் போடும் நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீர்த்த குடம், பால்குடம் உள்ளிட்ட தங்களது நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காலை தேர்வீதி பகுதியில் குடிக்கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மனுக்காக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தாரைதப்பட்டைகளுடன் பால்குடம் எடுத்து ஊர்வலமாக ஆலயம் வருகை தந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து சில பக்தர்கள் மாரியம்மனுக்கு முடிகாணிக்கையும், அங்கப்பிரதட்சணமும் செய்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றினர். தொடர்ந்து மாரியம்மன் முக்கிய திருவிழாவான அக்னி சட்டி, பால்குடம், தீர்த்த குடம், அழகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வருகின்ற திங்கள், செவ்வாய், ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. மேலும் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் ஆலயத்தில் இருந்து அமராவதி ஆற்றுக்கு கம்பம் எடுத்துச் செல்ல இருப்பதால் அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.
கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு, எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ சப்த கன்னிமார் ஸ்ரீ மாவடிராமசாமி, ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலய வைகாசி மாத 13 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக ஆலய வாசலில் பிரத்யேகமாக கலசங்கள் அமைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் யாகசாலையில் பிரத்யேக யாக வேள்வி நடத்தினார். அதைத் தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ மூர்த்தி ஹோமங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் மூலவர் தீர்த்த மாரியம்மனுக்கும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு, எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தீர்த்தம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத 13 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)