![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bakrid festival: புதுச்சேரி காந்தி திடலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
புதுச்சேரி காந்தி திடலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.
![Bakrid festival: புதுச்சேரி காந்தி திடலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை bakrid festival: Muslims offer special prayers at Puducherry Gandhi Thidal TNN Bakrid festival: புதுச்சேரி காந்தி திடலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/29/2996d7df9a49adc79f9a5351da8f8a8d1688019769209113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரியில் ஈகை பெருநாள் தொழுகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் காந்தி திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொழுகை நடத்துவது வழக்கம், அதன்படி இன்று கடற்கரை சாலை காந்தி திடலில் ஈகை பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளைச் சார்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
ஆளுநர் தமிழிசை வாழ்த்து:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாழும் இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித நேயத்தையும் தன்னலம் கருதாத ஈகை பண்பையும் போதிக்கும் பக்ரீத் பண்டிகை, துன்பத்தில் இருப்பவர்களுக்கும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும் செய்யும் உதவி, இறைவனுக்கு செய்யும் தொண்டு என்ற கருத்தை வலியுறுத்துகிறது. இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு போதித்த அன்பு, தியாகம், சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை உலகமெங்கும் செழித்து சமத்துவ சமுதாயம் வளர இந்த நாளில் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித குலத்தின் சிறப்புகளில் ஈகைப் பண்பும் ஒன்று. அது பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். தன்னலம் கருதாத இந்தச் செயலே ஈகைப் பண்பாகப் போற்றப்படுகிறது. இத்தகைய ஈகைப் பண்பால் மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டுச் சிறப்புகள் இத்தகைய பண்டிகைகள் மூலம் வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.
ஈகைப் பண்பையும் மனித நேயத்தையும் முன்னிறுத்தும் அதே வேளையில், தன்னலம் கருதாத தியாகத்தின் மூலம் பரிபூரண இறையருளைப் பெற முடியும் என்பதையும் உலகிற்கு எடுத்துரைக்கும், இந்த பக்ரீத் நன்னாளில் இறைத்தூதர் முகமது நபிகளின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, அவர் உலகிற்குப் போதித்த அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்ற உறுதியேற்போம் என்று கூறி இசுலாமிய சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒரு முறை இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)