Lord Shani Dev: சனிப்பெயர்ச்சியால் பாதிப்பா? - 12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கோயில்கள்!
கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சனீஸ்வர பகவான் கோயில்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

ஆன்மிகத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அதற்காக பரிகாரத் தலங்கள் இருக்கிறது என்பது பற்றிக் காணலாம்.
சனிப்பெயர்ச்சி நிகழ்வு
ஆன்மிகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஜோதிடமானது 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கோள்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. நவக்கிரகங்கள் பெயர்ச்சி அடையும்போது அது ராசிகள் மற்றும் நட்சத்திரங்களில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. நவக்கிரக பெயர்ச்சிகளில் சனி மற்றும் குரு பெயர்ச்சி மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற்றது.
அன்றைய நாளில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைந்தார். இது 12 ராசிகளிலும் மாற்றங்களை உண்டாக்கும். சனி பகவான் கொடுக்கவும் செய்வார், கெடுக்கவும் செய்வார் என்பது போல நாம் நன்மை செய்தால் நன்மைகளை அள்ளித்தரவும், தீமை செய்தால் தண்டிக்கவும் செய்வார் சனி பகவான் என நம்பப்படுகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் சனிபெயர்ச்சிக்காக பரிகார தலங்கள் எங்கெங்கு இருக்கிறது என்பதைக் காணலாம்.
சனி பகவான் பரிகாரத் தலங்கள்
- தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் தாலுகாவில் குச்சனூர் என்ற ஊர் உள்ளது. இங்கு சனி பகவான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மஞ்சள் காப்பு செலுத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. அதேசமயம் நாமம், பட்டை ஆகியவை அணியப்பெற்று திகழும் சனி பகவானை வணங்கினால் தீராத பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.
- சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி பகுதியில் செயல்படும் வைத்தீஸ்வரன் கோயிலில் அருள் பாலிக்கும் சனி பகவானை வணங்கினால் நோய் உபாதையிலிருந்து மீளலாம் என்பது நம்பிக்கையாகும்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரில் அறையணிநல்லூர் என்ற ஊரில் இருக்கும் அரையணிநாதர் கோயிலில் காகத்தின் மீது ஒரு காலை ஊன்றிய நிலையில் தரிசனமளிக்கிறார்.
- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து நால்ரோடு சந்திப்பில் திருநெல்லிக்காவல் ஆலயம் அமைந்துள்ளது. சனி பகவானால் ஏற்படும் தோஷங்களை நீங்க இங்குள்ள இறைவனை வழிபடுவது சிறந்தது.
- விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே இருக்கும் வாலீஸ்வர் ஆலயத்தில் தனி சன்னதியில் சனிபகவான் அருள்கிறார். சனி பகவானால் பாதிப்புகளை எதிர்கொண்டால் இங்கு வணங்கினால் தீர்வு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் எட்டியத்தளி என்னும் ஊர் உள்ளது. அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வணங்கலாம்.
- தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயிலில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் தன் இரு மனைவிகளுடனும், இரு மகன்களுடனும் மேற்கு திசை நோக்கி தம்பதி சமேதனராய் சனி பகவான் காட்சியளிக்கிறார். காக வாகனத்துடன் பலிபீடமும், கொடி மரமும் இருக்கும் இந்த தல சனீஸ்வரனை நாம் வழிபட்டால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)























