Trump on Iran War: “என் இலக்கு இதுதான்” - போர் குறித்து உண்மையை உடைத்த ட்ரம்ப்; பரபரப்பு விளக்கம்
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறங்கியது எதற்காக என்ற உண்மையை அவரே போட்டு உடைத்துள்ளார். அது தொடர்பாக அவர் அளித்த பேட்டி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா இறங்கியது எதற்காக என்று அந்நாட்டு மக்களே கேட்டு தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் இஸ்ரேலுடையது என்றும் தேவையில்லாமல் ட்ரம்ப் அதில் இறங்கிவிட்டதாகவும் போராட்டக்காரர்களும், பல உலக நாடுகளுமே கூறி வருகின்றன. இந்த நிலையில், பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியின் மூலம், இந்த போரில் அவர் குதித்தது எதற்காக என்ற உண்மை வெளிவந்துள்ளது.
போர் தொடங்கியது எவ்வாறு .?
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிக்க முற்படுவதாகவும், அதனால், அணுசக்தி திட்டம் தொடர்பாக தங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்தார். அதற்காக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. ஆனால், ஈரானை தாக்கும் நோக்கிலேயே ட்ரம்ப் செயல்பட்டு வந்தார். 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், மறுயும் மத்திய கிழக்கில் படைகளை குவிக்கத் தொடங்கியது அமெரிக்கா.
இந்நிலையில், 3-ம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஈரான் பல நிபந்தனைகளை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் மத்தியஸ்தம் செய்த ஓமன் அறிவித்தது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான அன்றே ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல்களை தொடங்கின.
ஈரானும் அதற்கு பதிலடி கொடுக்கத் தொடங்கியது. அதில் பெரும் திருப்பமாக, யாரும் எதிர்பார்க்காத வகையில், கத்தார், குவைத், துபாய், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதலை ஆரம்பித்தது. அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போது அந்த போர் உச்சகட்டத்தை எட்டி, இருதரப்பிலும், எண்ணெய் வளங்கள், மின் கட்டமைப்புகள், குடிநீர் ஆலைகள், ராசாயன ஆலைகள் என்று அனைத்தும் குறிவைக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் ட்ரம்ப்பின் முடிவிற்கு எதிர்ப்பு
போர் ஒருபுறம் தீவிரமடைந்த நிலையில், இஸ்ரேலுடை இந்த போரில் ட்ரம்ப் தேவையில்லாமல் நுழைந்துவிட்டதாகக் கூறி, அமெரிக்காவில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, இந்த போர் தொடர்பாகவும், ட்ரம்ப்பின் புதிய குடியேற்ற மற்றும் வரிக் கொள்கைகள், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
போர் எதற்காக என்ற உண்மையை உடைத்த ட்ரம்ப்
இப்படிப்பட்ட சூழலில், இந்த போரில் எதற்காக இறங்கினார் என்ற உண்மையை உடைத்துப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஈரானில் உள்ள எண்ணெயை அமெரிக்கா கைப்பற்றக்கூடும் என்றும், டெஹ்ரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவையும் கைப்பற்றலாம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "உண்மையைச் சொல்லப்போனால், ஈரானில் உள்ள எண்ணெயை கைப்பற்றுவதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால், அமெரிக்காவில் உள்ள சில முட்டாள்கள், 'நீங்கள் ஏன் அதைச் செய்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்," என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை கார்க் தீவை கைப்பற்றுவதாக அமையலாம் என குறிப்பிட்டுள்ள அவர், “ஒருவேளை நாங்கள் கார்க் தீவை கைப்பற்றலாம், அல்லது கைப்பற்றாமலும் போகலாம். எங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன... அப்படியென்றால், நாங்கள் அங்கே [கார்க் தீவில்] சிறிது காலம் இருக்க வேண்டியிருக்கும்.” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் ஈரானை தாக்குவதே எண்ணெய் வளத்தை கைப்பற்றத்தான் என்று உலகம் முழுவதுமே பரவலாக பேசப்பட்டது. ஆனால், அவர் ஏதேதோ காரணங்களை கூறிவந்த நிலையில், தற்போது தான் அவரது வாயில் இருந்து உண்மை வெளிவந்துள்ளது.
இதை வைத்து பார்க்கும்போது, இந்த போர் இப்போதைக்கு முடியும் என்று தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.























