White House Gun Shoot: வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு; ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகளை நிறுத்தி வைத்த அமெரிக்கா
அமெரிக்காவின் பாதுகாப்பு மிக்க வெள்ளை மாளிகை அருகே பகல் நேரத்திலேயே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை நடத்திய ஆப்கானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு நடத்தினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இரண்டு தேசிய காவல்படை வீரர்கள் படுகாயமடைந்தனர். இதற்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு
இந்த துப்பாக்கிச்சூடு வெள்ளை மாளிகையின் வடமேற்கே உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேசிய காவல்படையின் வீரர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். முதலில் பெண் காவலர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடத்திய அந்த வாலிபர், பின்னர் மற்றொரு காவலரையும் சுட்டுள்ளார். உடனடியாக மற்ற பாதுகாப்புப் படை வீரர்கள், தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டு, பின்னர் அவரை மடக்கி பிடித்தனர்.
இதனிடையே, படுகாயம் அடைந்த 2 பாதுகாப்பு படை வீரர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகள் நிறுத்தி வைப்பு
இந்த துப்பாக்கிச்சூடு நடந்தபோது வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் இல்லை என்றும் அவர் புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ பண்ணை வீட்டில் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவத்திற்கு அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதோடு, இது ஒரு மிருகம் நடத்திய பயங்கரவாத தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ட்ரம்ப் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்தியதாக கூறியது. பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நெறிமுறைகளை மேலும் மதிப்பாய்வு செய்வது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், "நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லாத எந்தவொரு நாட்டிலிருந்தும் வந்து இங்கு தங்கி, நமது நாட்டிற்கு நன்மை சேர்க்காத எந்தவொரு வெளிநாட்டினரையும் அகற்றுவதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்“ என்றும், “அவர்களால் நம் நாட்டை நேசிக்க முடியாவிட்டால், அவர்கள் நமக்கு தேவையில்லை" என்றும் தாக்குதலுக்குப் பிறகு பேசிய அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்
இதனிடையே, இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய அந்த வாலிபர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தாக்குதல் நடத்தியபோது போலீசார் சுட்டதில், ரஹ்மானுல்லாவுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய குழப்பமான சூழலின்போது, அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர் என்றும், அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் திட்டமான ‘ஆபரேஷன் அல்லீசஸ் வெல்கம்‘ மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் எதற்காக துப்பாக்கிசூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.





















