Trump Warns Iran: இந்தா தொடங்கிட்டார்ல.! “வேகமா செயல்படலைன்னா அங்க எதுவும் மிஞ்சாது“; ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
US Iran War: சீன பயணத்தை முடித்து திரும்பிய ட்ரம்ப், ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் என்ற தகவல் வெளியான நிலையில், ட்ரம்ப் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

தனது சீன பயணத்தை முடித்து நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோபமாகக் காணப்படுகிறார். பெய்ஜிங்கிலிருந்து திரும்பிய உடன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சுமார் அரை மணி நேரம் அவர் பேசியுள்ளார். அப்போது, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அவரது சீன பயணம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க, அமெரிக்கா மற்றும் ஈரான் மாறி மாறி நிபந்தனைகளை விதித்த நிலையில், அமெரிக்க அதிபர், ஈரானுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம்.
ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை என்ன.?
ஈரானுடன் இந்த வாரம் மீண்டும் போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்ற செய்திகளுக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பேசியுள்ளார் . அரை மணி நேரத்திற்கும் சற்று அதிகமாக நீடித்த இந்த உரையாடல், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் தொடங்குவதற்குச் சற்று முன்பு முடிவடைந்தது.
அதன் பிறகு தான் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளர். அந்த பதிவில் அவர், “ஈரானுக்கு நேரம் விரைந்து கொண்டிருக்கிறது, அவர்கள் மிக வேகமாகச் செயல்பட வேண்டும், இல்லையெனில் அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது. காலம் பொன்னானது!“ என்று கூறியுள்ளார்.
ஈரானுக்கு நிபந்தனைகள் விதித்த அமெரிக்கா
முன்னதாக, டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு 5 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த நிபந்தனைகளில், ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்காமல் இருப்பதும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாஷிங்டனிடம் ஒப்படைப்பதும் அடங்கும்.
- தடைகள் மற்றும் அதன் கொள்கைகளால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு அமெரிக்கா எந்த இழப்பீடும் வழங்காது.
- ஈரான் 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாஷிங்டனிடம் ஒப்படைக்க வேண்டும்.
- ஈரான் தனது அணுசக்தி நிலையங்களில் ஒன்றை மட்டுமே செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்.
- வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களில் 25 சதவீதத்தை விடுவிக்கவும் அமெரிக்கா மறுத்துவிட்டது.
- பல முனைகளில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமும் முடிவும் ஏற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரித்து பதிலுக்கு நிபந்தனைகள் விதித்த ஈரான்
இந்நிலையில், அமெரிக்கா விதித்த நிபந்தனைகளை முற்றிலும் நிராகரித்த ஈரான், தங்கள் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என பதிலடி கொடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்கு ஈரான் தரப்பில் பதில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி,
- பிராந்தியம் முழுவதும், குறிப்பாக லெபனானில், ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வர வேண்டும்.
- ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் உடனடியாக நீக்க வேண்டும்.
- சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும்.
- சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பாதையாக திகழும் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் முழுமையான அதிகாரத்தை அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும்.
இப்படி, இரு நாடுகளும் மாறி மாறி நிபந்தனைகளை விதித்துள்ளதால், பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான், ட்ரம்ப் தற்போது கடும் எச்சரிக்கையை விடுத்திருப்பதால், ஏற்கனவே செய்திகள் வெளியானது போல், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கும் என்று தெரிகிறது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















