Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
இந்தியா உட்பட 60 நாடுகளின் மீது, கூடுதலாக 12.5 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் வேளையில் இந்த முன்மொழிவு வந்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களுக்கு, கட்டாய உழைப்பு, அதாவது Forced Labour முறைகள் பயன்படுத்தப்பவதாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. இவ்வாறு கட்டாய உழைப்பை கொண்டு தயாரிக்கப்பட்ட பொட்கள், தங்கள் சந்தைகளில் நுழைவதை தடை செய்ய தவறிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, இந்தியா உட்பட 60 நாகள் மீது கூடுதலாக 12.5 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய வரி என்ன.?
1974-ம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301-ம் பிரிவின் கீழ், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியால் (USTR) நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த சமீபத்திய முன்மொழிவு உருவாகியுள்ளது.
கட்டாய உழைப்பு நடைமுறைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பொருட்களின் இறக்குமதியை தடுப்பதற்காக, இந்தியா உட்பட 60 நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்த விசாரணைகள் ஆராய்ந்தன.
அந்த ஆய்வைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்குமாறு USTR பரிந்துரைத்தது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும், அவை பொதுமக்களின் கலந்தாலோசனை மற்றும் ஆய்வுக்கு உட்பட்டவை.
வர்த்தக உறவுகளை மறுவடிவமைக்கவும், அமெரிக்க வணிகங்களையும், தொழிலாளர்களையும் பாதிக்கும் நியாயமற்ற நடைமுறைகள் என தான் கருதுபவற்றை களையவும் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் ஒரு பரந்த வர்த்தகக் கொள்கை முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த முன்மொழிவு அமைகிறது.
இந்தியா, சீனா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரலியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட 60 நாடுகள், கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி மீதான தடைகளை அறிமுகப்படுத்தி, திறம்பட செயல்படுத்தத் தவறிவிட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
இந்தியா மறுப்பு
அமெரிக்கா சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்தைகள் மூலம் இந்த பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி, கூடுதல் வரி விதிக்கும் முடிவை அமெரிக்கா கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் முதன்மை பேச்சுவார்த்தையாளர்கள் டெல்லியில் 3 நாட்கள் தங்கி, தற்போது இந்திய அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முன்னேற்றம் குறித்து பதிலளித்த வர்த்தக அமைச்சகம், பிரிவு 301 நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியா அமெரிக்காவுடன் தீவிரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று கூறியதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதே சமயம், இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதை மையமாகக் கொண்ட தனிப் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட கட்டமைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக இந்தியாவும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரஸ்பர வர்த்தக ஏற்பாடு மற்றும் பரந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (BTA) பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு செயல் திட்டத்தை கோடிட்டுக் காட்டிய, பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்பட்ட இந்தியா-அமெரிக்க கூட்டறிக்கையிலிருந்து இந்தக் கட்டமைப்பு உருவானது.
இந்த கட்டண முன்மொழிவு ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















