Trump Vs India: இந்தியாவுக்கு எதிரான சர்ச்சை கருத்தை பகிர்ந்த ட்ரம்ப்; மழுப்பிய அமெரிக்க தூதரகம்; இந்தியா பதிலடி
இந்தியா மீது சர்ச்கைக்குரிய கருத்தை உள்ளடக்கிய பதிவு ஒன்றை தனது சமூகவலைதளத்தில் ட்ரம்ப் பகிர்ந்த நிலையில், இந்தியா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. நடந்தது என்ன.? பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், ஒரு பாட்காஸ்டரின் அறிக்கை ஒன்றை பகிர்ந்தார். அதில், இந்தியாவை ‘நரகக் குழி‘ என்று வர்ணிக்கும் இழிவான வரிகள் இருந்ததால் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, அதை முழுப்பும் வகையில் அமெரிக்க தூதரகம் இந்தியாவை சிறந்த நாடு என்று ட்ரம்ப் நம்புவதாக ஒரு அறிக்கையை வெளியிட்ட நிலையில், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து நடந்த நிகழ்வுகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
ட்ரம்ப் பகிர்ந்த சர்ச்சைக்குரிய அறிக்கை
தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் நேற்று பிரபல அரசியல் விமர்சகர் மைக்கேல் சாவேஜின் அறிக்கை ஒன்றை பகிர்ந்தார். அந்த பதிவு, இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக இனவாததத்தை தூண்டும் வகையில் இருந்தது. அதில் ஒரு வரியில், இந்தியா ‘நரகக் குழி‘ என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான கருத்தை ட்ரம்ப் பகிர்ந்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த அறிக்கையில், 9 மாத கர்ப்பிணிகள் விமானத்தில் ஏறி அமெரிக்காவிற்கு வந்து குழந்தையை பெற்றெடுப்பதாகவும், அந்த குழந்தை உடனடியாக அமெரிக்க குடிமகனாகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த குழந்தை மூலமாக இந்தியாவில் இருந்தோ, சீனாவில் இருந்தோ தங்கள் மொத்த குடும்பத்தையும் அமெரிக்காவிற்குள் இழுத்துக் கொள்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, இந்தியா மற்றும் சீன குடியேற்றவாசிகள் வெறும் மென்பொறியாளர்கள் அல்ல, அவர்கள் லேப்டாப் வைத்திருக்கும் தாதாக்கள் என்றும், மாஃபியா கும்பல்களை விட அமெரிக்காவிற்கு அவர்கள் அதிக சேதத்தை செய்துள்ளனர் என்றும் அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இந்தியாவும், சீனாவும் ‘நரகக் குழிகள்‘ என்றும் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களாலும், சீனர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வெள்ளையர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
மழுப்பலான அறிக்கையை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குள்ளான நிலைமையை சமாளிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டது அமெரிக்க தூதரகம். அதில், உயர்மட்டத்தில் இருக்கும் தனது நல்ல நண்பர்(மோடி) ஒருவரால் வழிநடத்தப்படும் இந்தியா ஒரு சிறந்த நாடு என்று ட்ரம்ப் நம்புவதாக கூறப்பட்டிருந்தது.
இந்தியா கொடுத்த பதில்
இதையடுத்து, இந்த பதிவுக்கு ட்ரம்ப்பை நேரடியாக குறிப்பிடாமல், இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “இந்த கருத்துக்கள், நீண்ட காலமாக பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்திய-அமெரிக்க உறவின் யதார்த்தத்தை நிச்சயம் பிரதிபலிக்கவில்லை“ என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியுள்ளார்.
மேலும், வெளியுறவு அமைச்சகத்தின் அந்த அறிக்கையில், “அந்த கருத்துக்களையும், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம். அந்த கருத்துக்கள் வெளிப்படையாகவே போதிய தகவலின்றி, பொருத்தமற்றவையாகவும், தரம் தாழ்ந்தவையாகவும் உள்ளன“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Before You Go
"விஜய் நீங்க பேசுனது சரியல்ல ஸ்டாலினை ஏளனம் செய்யாதீங்க" சப்போர்ட்டுக்குவந்த திருமா!
ட்ரெண்டிங் செய்திகள்

















