![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sri Lanka Refugees: இலங்கைக்கு திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக குழு! நடைமுறையை எளிமைப்படுத்த இலங்கை அரசு ஏற்பாடு!
தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் தாய்நாடு திரும்பும் முறையை எளிமைப்படுத்த இலங்கை அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது.
![Sri Lanka Refugees: இலங்கைக்கு திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக குழு! நடைமுறையை எளிமைப்படுத்த இலங்கை அரசு ஏற்பாடு! Sri Lanka Refugee President Secretary appoints committee to facilitate repatriation of Sri Lankan refugees from India Sri Lanka Refugees: இலங்கைக்கு திரும்ப விரும்பும் தமிழர்களுக்காக குழு! நடைமுறையை எளிமைப்படுத்த இலங்கை அரசு ஏற்பாடு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/05/19357f561aeb3ce8b8a6f6180b9f19af1662374850832102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலங்கை அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ போர்க்காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயல்முறையை எளிமைப்படுத்துவதற்காக அதிபரின் செயலாளர் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
இலங்கையின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்கிரமசிங்க தலைமையிலான இந்த குழுவில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், வெளிவிவகார அமைச்சரின் சிறப்பு அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிறப்பு அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சரின் சிறப்பு அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
போர்க்காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையைச் சேர்ந்தவர்களை மீண்டும் அழைத்து வர வேண்டும் என “ ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு” வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இதுகுறித்து பேசுவதற்காக, அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இன்று அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் தற்போது சுமார் 58 ஆயிரம் இலங்கையர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாகவும், அவர்களில் 3 ஆயிரத்து 800 பேர் மட்டுமே இலங்கைக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை எளிமைப்படுத்துவதற்காக இந்தக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகரலாயமும் இந்த செயல்முறையை இலகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. பொது நிர்வாக அமைச்சரின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சக மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் பிரதமர் செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ்.சூரியகுமாரி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். “
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்த நாட்டு அரசாங்கத்திற்கும் நடைபெற்ற போரின்போதும், இறுதி போரின்போதும் லட்சக்கணக்கான இலங்கை வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து தஞ்சமடைந்தனர். அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் முடிவுக்கு வந்தாலும் இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் சொந்த நாடு திரும்ப விருப்பமில்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் இலங்கையின் மோசமான பொருளாதார நிலையால் ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு தஞ்சம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)