Nepal Bus Accident: நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து; 18 பேர் பலி, 27 பேர் காயம்; காலையிலேயே சோகம்.!
நேபாளத்தில் அதிகாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து ஆற்றில் கவிழ்ந்த இந்த விபத்தில், 27 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 18 பேர் பலி
நேபாளத்தில் இன்று அதிகாலையில், போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு, 44 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டப்பாட்டை இழந்த அந்த பேருந்து, தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. காத்மாண்டுவிலிருந்து மேற்கே சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் கஜூரி அருகே அதிகாலை 1.15–1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த தகவலை அறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 18 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு சிறுமி, 8 பெண்கள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியும் அடங்குவார். மேலும், காயமடைந்தவர்களில் ஒரு ஜப்பானியப் பெண்ணும் ஒரு டச்சுப் பெண்ணும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணியில், நேபாள ராணுவம், ஆயுதமேந்திய காவல் படை, நேபாள காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால், மீட்பு முயற்சிகளை கடினமாக்க இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிக வேகமே விபத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.























