ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
"ஈரான் ஒருபோதும் யாருக்கும் அடிபணியாது" என்று திட்டவட்டமாகக் கூறிய அப்துல் மஜீத், ஈரான் இதுவரை யாரிடமும் சரணடைந்த சரித்திரம் இல்லை என்றும், இனிமேலும் அது நடக்காது என்றும் தெரிவித்தார்.

-Ashish Singh
சர்வதேச அரசியல் சூழல் மற்றும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் உச்ச தலைவரின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியான அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி ஏபிபி-க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈரானின் தற்காப்பு கொள்கை, அணு ஆயுத நிலைப்பாடு மற்றும் அண்டை நாடுகளுடனான உறவு குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சரணடைய மறுக்கும் ஈரான்
போர் குறித்து பேசிய அவர் "ஈரான் ஒருபோதும் யாருக்கும் அடிபணியாது" என்று திட்டவட்டமாகக் கூறிய அப்துல் மஜீத், ஈரான் இதுவரை யாரிடமும் சரணடைந்தாக சரித்திரம் இல்லை என்றும், இனிமேலும் அது நடக்காது என்றும் தெரிவித்தார். மேலும், தேவைப்பட்டால் 8 ஆண்டுகாலப் போரைச் சந்திக்கவும் ஈரான் ராணுவம் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்தார்.
அணு குண்டு விவகாரம்
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக எழுந்துள்ள புகார்களை முற்றிலுமாக நிராகரித்த அவர், "ஈரானில் அணு குண்டு தயாரிப்பது என்பது 'ஹராம்' (Haram) என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் உச்ச தலைவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியபடி, அணு ஆயுதங்களை உருவாக்குவது எங்களது கொள்கையல்ல, அது எங்களால் சாத்தியமும் இல்லை," என்று அவர் விளக்கமளித்தார்.
கமெனி மீதான தாக்குதல் மற்றும் இழப்புகள்
ஈரான் உச்ச தலைவர் கமேனி மீதான தாக்குதல் குறித்துப் பேசிய அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முயன்றபோது, அவர் அதை மறுத்துவிட்டதாகக் கூறினார். "மக்களை விட்டுவிட்டு நான் எங்கும் வரமாட்டேன்" என்று கமேனி உறுதியாக நின்றதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நிலவும் தாமதத்திற்கு, தற்போதைய போர் சூழலால் 88 பிரதிநிதிகள் குழு ஒன்றுகூட முடியாததே காரணம் என்று அவர் தெரிவித்தார்.எங்களது நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மருத்துவமனைகளைத் தாக்கினர். 170 பள்ளிக்குழந்தைகளைக் கொன்றுள்ளனர் என்று குற்றம் சாட்டினர்
டிரம்ப் குறித்த கிண்டல்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரை அப்துல் மஜீத் கடுமையாகச் சாடினார். ஈரானுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாக டிரம்ப் கூறியதை ஒரு நகைச்சுவையாகப் பார்ப்பதாகக் கூறிய அவர், டிரம்ப் முதலில் அமெரிக்காவில் ஒரு மேயரை உருவாக்குவதில் கவனம் செலுத்தட்டும் என விமர்சித்தார். இஸ்ரேலின் அடக்குமுறையால் மக்கள் விலங்குகளை விட மோசமான நிலையில் வாழும் சூழலில் தான் இத்தகைய அமைப்புகள் உருவாகின்றன என்று அவர் கூறினார்
அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை
யுஏஇ (UAE), லெபனான், குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் மீதான தாக்குதல் குறித்துப் பேசிய அவர், "எங்களுக்கு எதிராக அமெரிக்கா தனது நிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்காத வரை, நாங்கள் எந்த அண்டை நாட்டையும் தாக்க மாட்டோம் என்று எங்கள் அதிபர் தெளிவாகக் கூறியுள்ளார். அமெரிக்கா எங்களை எப்படி தாக்குகிறது? அவர்களால் அமெரிக்காவிலிருந்து நேரடியாகத் தாக்க முடியாது, இந்த நாடுகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படியிருக்கும்போது தற்காத்துக் கொள்ள எங்களுக்கு உரிமை இல்லையா? அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும், எங்களை அல்ல," என்று பதிலளித்தார்.
ரஷ்யா-சீனா ஆதரவு இல்லை
ரஷ்யாவும் சீனாவும் ஈரானுக்கு ஆதரவளிப்பதாக வரும் செய்திகளை அவர் மறுத்தார். "ரஷ்யாவாலும் சீனாவாலும் ஈரானை ஆதரிக்க முடியாது என்று அதிபர் டிரம்பே கூறியுள்ளார். இவை அனைத்தும் ஊடகங்களின் ஊகங்களே," என்றார்.
"அனைத்து நாடுகளின் தலைவர்களும் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவிடம் சென்று, அவர்கள் தான் எங்களைத் தாக்கியது மற்றும் எங்கள் உச்ச தலைவரைக் கொன்றது என்று கூற வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக, அவர்கள் எங்களிடம் வந்து போரை நிறுத்தச் சொல்கிறார்கள். ஏன் இதை டிரம்பிடமும் நெதன்யாகுவிடமும் சொல்லவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவுடனான உறவு மற்றும் பொருளாதாரத் தாக்கம்
ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலுக்காக இந்தியாவை கண்டிக்காத அவர், அதற்கு மாறாக, போர்ச் சூழலால் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயருவதை சுட்டிக்காட்டினார். போரை நிறுத்த டிரம்ப் மீது இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி தற்போதைக்கு மூடப்படவில்லை என்றும், ஆனால் ஒருமுறை மூடப்பட்டால் அது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான தடையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
























