America Iran War: ஈரானுக்கு மெர்சல் காட்டும் ட்ரம்ப்; மத்திய கிழக்கில் படைகள், ஆயுதங்கள் குவிப்பு; வெடிக்கும் போர்.?
மத்திய கிழக்கில் இவ்வளவு ராணுவ சக்தியை குவித்ததன் மூலம், அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா இந்த பிராந்தியத்தில் ஒரு பெரிய போரைத் தொடங்கும் என்ற அச்சத்தை ட்ரம்ப் அதிகரித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்க ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய கிழக்கு மீண்டும் பதற்றமாக உள்ளது. அணுசக்தி பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க, இரு நாடுகளின் பிரதிநிதிகளும் நேற்று ஜெனீவாவில் சந்தித்த நிலையில், அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது விமானப்படை மற்றும் கடற்படை இருப்பை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்திற்குள், அமெரிக்கா ஈரானிய எல்லைக்கு அருகில் 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. இது மற்றொரு போரின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் ஒரு பெரிய போருக்கு தயாராகும் ட்ரம்ப்
அணு ஆயுத பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை எச்சரித்தார். இதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியும் அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுப்பதாக எச்சரித்தார். அமெரிக்க செய்தி வலைத்தளமான ஆக்சியோஸின் அறிக்கையின்படி, டிரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கில் ஒரு பெரிய போருக்கு தயாராகி வருகிறது. பெரும்பாலான அமெரிக்கர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்தப் போர் மிகப் பெரியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஈரானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை பல வாரங்கள் நீடிக்கும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும். இது ஈரானிய அரசாங்கத்திற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும். கடந்த ஆண்டு, அமெரிக்கா ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்களைத் தாக்கியது, ஆனால் இந்த தாக்குதல் முழு பிராந்தியத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.
டிரம்ப் சமரசத்தை விரும்புகிறார்: ஜே.டி. வான்ஸ்
மத்திய கிழக்கில் இவ்வளவு ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்தால், அமெரிக்கா இந்தப் பகுதியில் ஒரு பெரிய நடவடிக்கையைத் தொடங்கும் என்ற அச்சத்தை ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார். தற்போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தோன்றுகின்றன. ட்ரம்பின் ஆலோசகர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் நேற்று ஜெனீவாவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியை சந்தித்து மூன்று மணி நேரம் ஆலோசித்தனர். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக இரு தரப்பினரும் கூறியிருந்தாலும், வேறுபாடுகள் ஆழமாகவே உள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சில வழிகளில் சிறப்பாக இருந்தபோதிலும், ஈரான் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத பல விஷயங்களில் அதிபர் ட்ரம்ப் வரம்புகளை நிர்ணயித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதாகவும் வான்ஸ் கூறியுள்ளார்.
“அடுத்த சில வாரங்களில் போர் தொடங்கும்“
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே விரைவில் போர் வெடிக்கக்கூடும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 150-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ சரக்கு விமானங்கள் மத்திய கிழக்கிற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கியுள்ளன. F-35s, F-22s மற்றும் F-16s உட்பட கிட்டத்தட்ட 50 போர் விமானங்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்த இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறினார். ஆனால், மற்ற நிபுணர்கள் அது விரைவில் நடக்கக்கூடும் என்று கூறுகிறார்கள். டரம்ப்பின் ஆலோசகர் ஒருவர், "அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க 90 சதவீத வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதனால், மத்திய கிழக்கில் ஒரு பெரிய போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதால், பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.























