China US Iran War: அமெரிக்கா - ஈரான் போரின் உள்ளே நுழைந்த சீனா; ஆனா இந்த தடவ ‘வேற மாதிரி‘; என்ன செய்யப்போறாங்க.?
மத்திய கிழக்கில், அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்குள் சீனா தற்போது நுழைந்துள்ளது. எதற்காக தெரியுமா.?

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து, அது உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த போருக்குள் சீனா நுழைந்துள்ளது. ஆனால், நிலவரத்தை கலவரமாக்குவதற்காக அல்ல. இந்த போரில் சீனா என்ன செய்யப் போகிறது தெரியுமா.? வாருங்க அதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்றுவரும் உச்சகட்ட போர்
அணுசக்தி திட்டம் தொடர்பான பிரச்னையில், ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், அவர்களுக்கு உதவும் அண்டை நாடுகளான அரபு நாடுகள் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி, அங்கு உள்ள எண்ணெய் வளங்களிலும் கை வைத்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளத. ஏனெனில், அரபு நாடுகளில் இருந்துதான் உலகின் பெரும் பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியாகிறது.
மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் முடக்கி வைத்துள்ளதால், கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறிய நிலையிலும், அந்நாடு தாக்குதல்களை நிறுத்தியபாடில்லை. முன்பை விட இன்னும் தீவிரமாக தாக்கி வருகிறது.
மாறி மாறி எச்சரிக்கை
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்தார் ட்ரம்ப். ஈரான் அதை செய்யவில்லை என்றால், அந்நாட்டின் மின் கட்டமைப்புகள் அனைத்தும் தாக்கி அழிக்கப்படும் என எச்சரித்தார்.
அதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா அவ்வாறு செய்தால், அதற்கு உதவிவரும் நாடுகளும் அதே நிலையில் தாக்கப்படும் என்று எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, கெடு முடிவதற்கு முன்பாகவே, திடீரென தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ட்ரம்ப் தங்கள் எச்சரிக்கைக்கு பயந்து பின்வாங்கிவிட்டதாக ஈரான் கூறியது. ஆனால், மறுபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக ட்ரம்ப் கூறிவந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்கா நடத்தவிருந்த தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சீனாவின் கண்டனமும், சமீபத்திய ஆஃபரும்
முன்னதாக, போரின் ஆரம்ப கட்டத்தில், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி, இஸ்ரேலுக்கு சீனா கடும் கண்டனங்களை தெரிவித்தது. மேலும், ஈரானின் தலைமை மாற்றம், அதன் உள்நாட்டு விவகாரம் என்றும், ஈரானின் அரசியலமைப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் கூறியது.
அதனால், எந்த காரணத்தை காட்டியும், ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடுவதை சீன அதிபர் ஷி ஜின்பிங் எதிர்ப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவே ஜியாகுன் தெரிவித்தார். அதோடு, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால், தற்போது ஈரான் உடனான போரில் மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக அமெரிக்காவிடம் சீனா தெரிவித்துள்ளது.
எதனால் இந்த மாற்றம்.?
ஈரான் உடனான பேர் தொடங்குவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தபடி, இந்த மாத இறுதியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், தற்போது போர் நடைபெற்றுவரும் நிலையிலும், ஏற்கனவே சீனா கண்டனம் தெரிவித்து, போரிலும் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு தராததாலும், ட்ரம்ப்பின் பயணம் தள்ளிவைக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, போர் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்க தரப்பில் அமைதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, வரும் மே மாதம் 14, 15 ஆகிய தேதிகளில், அதிபர் ட்ரம்ப் பீஜிங் செல்வதாக வெள்ளை மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பின் எதிரொலியாகவே, ஈரான் உடனான போரில் அமைதி ஏற்படுவதற்கான மத்தியஸ்தம் செய்ய உதவுவதாக சீனா அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனாவின் முயற்சிகள் வெற்றியடையுமா.? பொறுத்திருந்து பார்ப்போம்.























