![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
China Military Exercise: போர் பயிற்சியை தொடங்கிய சீனா...தொடரும் பதற்றம்...தைவானில் என்ன நடக்கிறது?
தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளை வியாழன் அன்று நடத்தியுள்ளது.
![China Military Exercise: போர் பயிற்சியை தொடங்கிய சீனா...தொடரும் பதற்றம்...தைவானில் என்ன நடக்கிறது? China begins military exercises around Taiwan news agency AFP quoting state media China Military Exercise: போர் பயிற்சியை தொடங்கிய சீனா...தொடரும் பதற்றம்...தைவானில் என்ன நடக்கிறது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/04/c2522db83237b9882eef1814f37261cf1659612140_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனா மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளை வியாழன் அன்று நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை தைவானுக்கு அருகே நிறுத்தியுள்ளது.
நேற்று, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்ற நிலையில், தைவானை தனது ஓர் அங்கமாக கருதி வரும் சீனா, இந்த செயலால் போபம் அடைந்தது. தைவானோ, தனி அரசாங்கத்துடன் இயங்கி வருகிறது. அமெரிக்காவின் செயலுக்கு பதிலடி தரும் வகையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளில், அமெரிக்காவின் உயர் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி தைவானுக்கு சென்றது இதுவே முதல்முறை. இதற்கு பதிலடியாக, உலகின் பரபரப்பான கடல்வழி பாதையிலும் தைவான் கரையிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் உள்ள பகுதிகளிலும் சீனா தொடர்ச்சியான போர் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "பயிற்சிகள் மதியம் 12 மணியளவில் (0400 GMT)தொடங்கியது. மேலும் தைவானின் கிழக்கே உள்ள நீரில் வழக்கமான ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டோம். ஏவுகணைகளின் துல்லியத்தையும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதிக்குள் எதிரியை அனுமதிக்காமல் தவிர்க்கும் போர் திறனை சோதனை செய்வதே இந்த பயற்சியின் நோக்கம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் போர் பயிற்சி குறித்து தெரிவித்துள்ள தைவான், "11 டோங்ஃபெங்-வகுப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா பல தொகுதிகளாக தாக்கியுள்ளது. பிராந்திய அமைதியை கெடுக்கும் பகுத்தறிவற்ற நடவடிக்கைகளை கண்டிக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது. சீனாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் எங்கு தரையிறங்கியது அல்லது எங்கு பறந்தது என்பது குறித்து தைவான் தகவல் வெளியிடவில்லை.
எல்லைத் தீவான பிங்டானில் உள்ள பத்திரிகையாளர்கள், பல சிறிய எறிகணைகள் வானத்தில் பறப்பதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து வெள்ளை புகை மற்றும் உரத்த ஒலி அங்கிருந்து கிளம்பியதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் பிரதான நிலப்பரப்பில், தைவானுக்கு மிக நெருக்கமான புள்ளியாகக் கூறப்படும் இடத்தில், பிரபல சுற்றுலாத் தலத்திற்கு அருகே ஒப்பீட்டளவில் குறைந்த உயரத்தில் ஐந்து இராணுவ ஹெலிகாப்டர்கள் பறப்பதையும் பத்திரிகையாளர்கள் கண்டனர்.
இந்த போர் பயிற்சிகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீடிக்கும் என்று சீனா அறிவித்துள்ளது. சீனாவின் செயல், தைவானுக்கு எதிரான போராக மாறுமோ என உலக நாடுகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)