America Quits WHO: உலக சுகாதார அமைப்புக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; பல மில்லியன் டாலர்கள் உதவி கட்; காரணம் என்ன.?
உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது அமெரிக்கா. இதனால், அந்த அமைப்பிற்கு கிடைத்துவந்த பல மில்லியன் டாலர்கள் உதவியை அது இழந்துள்ளது. ட்ரம்ப் வில காரணம் என்ன.?

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக ஓராண்டுக்கு முன்னரே ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அந்த அமைப்பிலிருந்து விலகியுள்ளது. இதனால், பல மில்லியன் டாலர்கள் உதவியை உலக சுகாதார அமைப்பு இழந்துள்ளது. ட்ரம்ப்பின் இந்த முடிவிற்கு காரணம் என்ன.? பார்க்கலாம்.
உலக சுகாதார அமைப்பு மீது குற்றம்சாட்டிய ட்ரம்ப்
கொரோனா பெருந்தொற்று காலத்திலேயே, உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார். அதோடு நிறுத்தாமல், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு, தற்போது அந்த விலகல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு, கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அந்த அமைப்பிற்கு இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது கட்டுப்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக, அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன.?
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை, உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. அதோடு, இந்த விலகல் அமெரிக்காவிற்கும், உலகிற்கும் ஒரு இழப்பு என்றும் அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தை அமெரிக்கா செலுத்தவில்லை என்றும், இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
பெரும் உதவித் தொகையை இழந்த WHO
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகியதன் மூலம், பல மில்லியன் டாலர்கள் உதவியை அந்த அமைப்பு இழந்துள்ளது. மேலும், ஏற்கனவே அமெரிக்கா செலுத்த வேண்டிய தொகையும் நிலுவையில் உள்ளது. இது குறித்து பேசியுள்ள அந்த அமைப்பின் வழக்கறிஞர்கள், அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் தாங்கள் காணவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கதவலின்படி, அமெரிக்கா, அந்த அமைப்பிற்கு 130 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
மேலும், இந்த விலகலின் மூலம், ஒரு புதிய தொற்றுநோய் குறித்து அமெரிக்காவிற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கக்கூடிய பிற நாடுகளின் தரவுகளுக்கான அணுகல் தடுக்கப்படும். புதிய நோய் தொற்றுக்களுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உருவாக்குவதற்கு அமெரிக்க விஞ்ஞானிகளின் திறனை முடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















