Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Trump Iran War Strait Of Hormuz: அடுத்த 48 மணி நேரத்தில் ஹார்மஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாவிட்டால், ஈரானுக்கு நரகத்தை காட்டுவேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உச்சகட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Trump Iran War Strait Of Hormuz: ஒப்பந்தம் மேற்கொள்ளுங்கள் அல்லது ஹார்மஸ் நீர்வழிப்பாதையை திறந்து விடுங்கள் என கடந்த மார்ச் 26ம் தேதி 10 நாள் கெடு விதித்தை ஈரானுக்கு ட்ரம்ப் நினைவூட்டியுள்ளார்.
ட்ரம்பின் உச்சகட்ட எச்சரிக்கை
ஈரான் மிகவும் மோசமான பின்விளைவுகளை எதிர்கொள்ள இன்னும் வெறும் 48 மணி நேரங்கள் மட்டுமே இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளுங்கள் அல்லது ஹார்மஸ் நீர்வழிப்பாதையை உலக பயன்பாட்டிற்கு திறந்து விடுங்கள், இதற்கு 10 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன் என கடந்த மார்ச் 26ம் தேதி தான் சொன்னதை அவர் மீண்டும் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், தான் கொடுத்த அவகாசம் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. நேரம் ஓடிக்கொண்டு இருக்கிறது என ட்ரம்ப் பேசியுள்ளார்.
நரகத்தை காட்டுவேன் - ட்ரம்ப்
சமூக வலைதள கணக்கில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ”48 மணி நேரத்தில் நான் சொன்னதை ஈரான் செய்யாவிட்டால், அவர்கள் மீது நரகத்தை இறக்குவேன். பெருமை கடவுளுக்கே போய் சேரட்டும்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலை தொடர்ந்து, ஹார்மஸ் நீர்வழிப்பாதையை ஈரான் மூடியதால் சர்வதேச நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வழித்தடத்தை திறக்காவிட்டால், ஈரானின் மின்சார உட்கட்டமைப்புகளை தாக்கி அழிப்பேன் என ட்ரம்ப் எச்சரித்தார். பின்பு பேச்சுவார்த்தை காரணமாக அதற்கான அவகாசம் ஒரு வாரமாக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு ஹார்மஸ் ஜலசந்தியை திறக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில், ட்ரம்ப் விடுத்த காலக்கெடு நாளை அதாவது ஏப்ரல் 6ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
வாய்ப்பே இல்லை - ஈரான்
மறுமுனையில் ட்ரம்ப் முன்வைக்கும் ஒப்பந்தத்தின் விவரங்கள் என்பது மிகவும் ஒருதலைபட்சமாக இருப்பதாக கூறி, அதனை ஏற்க ஈரான் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா தரப்பு பல்வேறு பேச்சுவார்த்தை திட்டங்களை முன்வைத்தாலும், பாதுகாப்பிற்கான உத்தரவாதம் மற்றும் சேதங்களுக்கான இழப்பீடுகளை உறுதி செய்ய வேண்டும் என ஈரான் உறுதிபட தெரிவித்து வருகிறது. ஒருவேளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கான மின்சார உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் அது ஒரு போர்க்குற்றம் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
ஈரான் கொடுத்த வார்னிங்..
இதனிடையே, மத்திய கிழக்கின் மற்றொரு முக்கிய நீர்வழிப்பாதை தொடர்பாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பாப் எல்-மண்டேப் நீர்வழிப்பாதை நீர்வழிப்பாதையை உலகம் எந்த அளவிற்குச் சார்ந்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், "உலகளாவிய எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு (, கோதுமை, அரிசி மற்றும் உர ஏற்றுமதிகளில் எவ்வளவு பங்கு பாப் எல்-மண்டேப் நீர்வழிப்பாதை வழியாகச் செல்கிறது? எந்தெந்த நாடுகளும் நிறுவனங்களும் இந்த நீர்வழிப்பாதை வழியாக அதிகபட்ச சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்கின்றன?" என்றும் பேசியுள்ளார். அரேபிய தீபகற்பத்தின் தென்கோடியில் அமைந்துள்ள பாப் அல்-மண்டேப் நீர்வழிப்பாதை, சூயஸ் கால்வாய்க்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் உலகளாவிய கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் சுமார் கால் பங்கைக் கையாளுகிறது. ஏமனின் கடற்கரையை ஒட்டியுள்ள இந்த நீர் வழித்தடத்தின் பெரும்பகுதி, ஈரான் ஆதரவு அமைப்பான ஹவுதியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஒருவேளை அதனை தடுக்கும் வகையில் ஈரான் செயல்பட்டால், அது உலக விநியோக சங்கிலியில் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ட்ரெண்டிங் செய்திகள்























