திடீரென அதிரடி முடிவு எடுத்த ராமதாஸ்; தமிழகத்தில் என்ன நடக்கப் போகிறது?
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தமிழ்நாடு மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்கும் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் தமிழ்நாடு மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்கும் என்றும் போராட்டத்தை தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:
இந்த கூட்டம் வன்னியர் சங்கத்தின் மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டம். 1980ல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக வன்னியர் சங்கம் வன்னிய மக்களுக்காக தொடர்ந்து அவருடைய பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் செய்திருக்கிறோம். வன்னிய மக்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம். 10.5 இட ஒதுக்கீடு கிடைக்க மாமல்லபுரம் மாநாட்டில் கூறியது போல கடுமையான போராட்டத்தை நடத்துவோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு சந்திக்கும். அந்த கடுமையான போராட்டத்தை நடக்காமல் செய்ய வேண்டியது அரசின் கடமை. சங்கம் என்றால் ஒற்றுமையாக இருப்பது, ஒன்று கூடுவது, உரிமைக்காக போராடுவது. வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காகவும், சங்கத்தை வலுப்படுத்துவதற்காகவும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்காகவும் இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளோம். வன்னியர் சங்கத்தின் கொள்கை என்ன என்பது குறித்து பேசுவதற்காகவும், கடுமையாக உழைக்க வேண்டும் என்பது குறித்தும் பேசுவதற்காக கூடியிருக்கிறோம். தற்போதைக்கு கட்சிப் பொறுப்புகளில் மாற்றம் ஏதுமில்லை. தற்போது குறிப்பிட்ட சில ஊடகங்கள் வதந்தி பரப்பி வருகின்றனர். எப்போதும் போல கட்சியும், சங்கமும் செயல்பட்டு வருகிறது. 10. 5% இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் தொடர்பாக அனைவரையும் கூட்டி பேசி தான் அறிவிப்போம் என தெரிவித்தார்.
பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும், இன்று நடைபெறும் கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்
வன்னியர் சங்க கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் இன்று நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள் மொழி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து வன்னிய சங்க நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு. த. அருள்மொழி ஐந்து மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் கெளரவ தலைவர் ஜி கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்பாக பேட்டியளித்த வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி
வன்னியர் சங்க கூட்டத்திற்கு சமூக வலைதளங்கள் மூலமாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அன்புமணி ராமதாசுக்கும் அழைப்பு சமூக வலைதளமான வாட்சப் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரும் தனக்கு வாட்சப் மூலமாக தான் தகவல் அளிப்பார் அதே போன்று அவருக்கும் வாட்சப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்தார். பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும், இன்று நடைபெறும் கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழக அரசை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நிர்பந்திக்கும் வகையில் கூட்டம் நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.





















