‘எந்த குழந்தையாக இருந்தாலும் ஈன்றெடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்’ - விழுப்புரம் ஆட்சியர் மோகன்
பெண் குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயின்றிட வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் - மாவட்ட ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின்கீழ், பெண்குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் 24.01.2023 நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளை காத்திடும் வகையிலும், பெண் குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயின்றிட வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, ஆண்களுக்கு நிகராக பெண்கள் பாலின விகிகதத்தை அதிகரிக்க வேண்டும், பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வியினை உறுதி செய்திட வேண்டும் என்ற வகையில், மாவட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பாக பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், 1000 ஆண்களுக்கு 1000 பெண்கள் சமமான சமுக சூழ்நிலை இருந்திட வேண்டும் ஆனால் தமிழகத்தில் 1000 ஆண்களுக்கு 922 பெண்களே இருக்கின்ற நிலை உள்ளது. இதனை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கருவிலிருக்கும் குழந்தை ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று பார்ப்பதை தடுப்பது, ஆண் பிள்ளைகளைப்போலவே, பெண் பிள்ளைகளுக்கும் அனைத்து விதமான தகுதிகளும், திறமைகளும் உள்ளது போன்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது, பிறந்த பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வி அளிப்பது, பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை தடுப்பது, பெண் குழந்தைகளுக்கு சரியான தொடுதல், தவறான தொடுதல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
பிறந்த குழந்தைகளை ஆரோக்கியமாகவும், அடிப்படை கல்வி வழங்கிடும் வகையிலும் அங்கன்வாடி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், பெண் குழந்தைகளை பாதுகாப்பது, பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வியினை வழங்கிடும் வேண்டும். மேலும், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவர்கள் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் சமம் என்பதை உணர்ந்து எந்த குழந்தையாக இருந்தாலும் ஈன்றெடுத்து நல்ல முறையில் வளர்த்திட வேண்டும் என்ற மனநிலை உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்தார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

