திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
தெலுங்கானா மாநிலத்திற்கு எளிதாகப் பயணம் செய்யும் வகையில் இயக்கப்பட்டு வந்த சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில், தற்போது நிரந்தர ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பயணிகள் தெலுங்கானா மாநிலத்திற்கு எளிதாகப் பயணம் செய்யும் வகையில் இயக்கப்பட்டு வந்த சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில், தற்போது நிரந்தர ரயிலாக (Regularised Express Train) மாற்றம் செய்து தென்னக ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்த ரயில் இனி வழக்கமான கால அட்டவணையுடன் கூடிய நிரந்தர விரைவு ரயிலாக இயக்கப்படவுள்ளதால் டெல்டா மாவட்ட பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வியாபாரிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்
ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அடிக்கடி பயணிக்கும் தமிழக வியாபாரிகளுக்கும், திருப்பதி, காளஹஸ்தி போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு மிகச்சிறந்த செய்தியாக அமைந்துள்ளது.
நிரந்தரமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ரயிலுக்குப் புதிய எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த ரயில் இனி வண்டி எண்: 17077 / 17078 என்ற எண்களுடன் இயக்கப்படும். இதன் சேவை ஜூலை மாதத்திலிருந்து தொடங்குகிறது:
- சார்லபள்ளியிலிருந்து (வண்டி எண் 17077): ஜூலை 7 முதல் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று தனது வழக்கமான சேவையைத் தொடங்கும்.
- திருச்சி சந்திப்பிலிருந்து (வண்டி எண் 17078): ஜூலை 8 முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று தனது மறுமார்க்கச் சேவையைத் தொடங்கும்.
விரிவான நேர அட்டவணை
பயணிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு ஏதுவாக இந்த ரயிலின் விரிவான நேர அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது:
| வண்டி எண் & வழித்தடம் | புறப்படும் நேரம் | சேரும் இடம் & நேரம் |
| வண்டி எண் 17077 (சார்லபள்ளி – திருச்சி) | செவ்வாய்க்கிழமை மாலை 5.20 மணி | புதன்கிழமை மாலை 6.45 மணிக்கு திருச்சி வந்தடையும். |
| வண்டி எண் 17078 (திருச்சி – சார்லபள்ளி) | புதன்கிழமை இரவு 9.30 மணி | வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும். |
ரயில் நின்று செல்லும் முக்கிய நிலையங்கள்
இந்த விரைவு ரயிலானது திருச்சி - விழுப்புரம் கார்டு லைன் (Chord Line) வழியாக இயக்கப்பட்டு, இரு மாநிலங்களின் பல்வேறு முக்கிய நகரங்களையும், ஆன்மீகத் தலங்களையும் இணைக்கிறது.
- தமிழகத்தில் நின்று செல்லும் இடங்கள்: ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் காட்பாடி.
- ஆந்திரா & தெலுங்கானாவில் நின்று செல்லும் இடங்கள்: சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், சீராலா, பாபட்லா, தெனாலி, குண்டூர், சத்தெனப்பள்ளி, நடிகுடி, மிரியாலகுடா மற்றும் நல்கொண்டா.
நவீன எல்.எச்.பி (LHB) பெட்டிகள் வசதி
பயணிகளுக்கு நவீன மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ரயிலின் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன:
- 3 இரண்டடுக்கு ஏசி பெட்டிகள் (AC Two-Tier)
- 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் (AC Three-Tier)
- 10 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class)
- 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class)
- மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் கொண்ட 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (Divyangjan friendly)
முன்பதிவு தொடக்கம்: இந்த ரயிலுக்கான முன்தொகை முன்பதிவு (Advance Reservation) தென்னக ரயில்வே முனையங்கள் மற்றும் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளங்கள் வழியாகத் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரச் சேவையாக மாற்ற வேண்டும் என்று திருச்சி பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கடந்த மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகத்திற்கும், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கும் (DRM) தனித்தனியாகக் கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்தார். திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் திருப்பதி, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்குச் செல்ல இந்த ரயில் பெரிதும் உதவுவதால், இதனை நிரந்தரமாக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தச் சார்லபள்ளி விரைவு ரயில், தமிழக - தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையேயான வணிகம் மற்றும் சுற்றுலாவை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்





















