புதுசு... இந்த வசதி திருச்சிக்கு புதுசு: பயணிகளுக்கு இனி இதுதான் வழி
திருச்சி விமான நிலையம் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி நகர் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இ- கேட்ஸ் வசதியை எம்.பி., துரை வைகோ நேரில் ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து விமானப்பயணிகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
திருச்சி விமான நிலையம் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி நகர் பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) இதை நடத்துகிறது. இது தமிழ்நாட்டின் முக்கியமான பயண மையங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.. திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு இது ஒரு முக்கிய போக்குவரத்து மையம்.

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், நாகை பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். இவர்கள் தங்கள் ஊர்களுக்கு வருவதற்கு திருச்சி விமான நிலையத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதேபோல் சுற்றுலாப்பயணிகளுக்கும் திருச்சி விமான நிலையம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
இந்த விமான நிலையம் 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது இது ஒரு உள்நாட்டு விமான நிலையமாக இருந்தது. 2012ம் ஆண்டு இது பன்னாட்டு விமான நிலையமாக மாறியது. இதன் பிறகு, பல வெளிநாடுகளுக்கு இங்கிருந்து விமானங்கள் செல்ல ஆரம்பித்தன. சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், ஷார்ஜா போன்ற இடங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன.
வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அதிகரிக்க அதிகரிக்க பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமானது. அதனால், விமான நிலையத்தில் புதிய கட்டிடங்களும் வசதிகளும் அதிகரிக்கப்பட்டன. 2017ம் ஆண்டு ஒரு புதிய பன்னாட்டு முனையம் திறக்கப்பட்டது. இந்த முனையம் நவீன வசதிகளுடன் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை தந்தது. இந்த வளர்ச்சி திருச்சியை ஒரு பெரிய விமான மையமாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை. தொடர்ந்து மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பல்வேறு வசதிகளுடன் புதிய விமான முனையம் திறக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.
இவ்வாறு இருக்கும் நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட FTI-TTP தளத்தின் செயல்பாடுகளை திருச்சி எம்.பி., துரை வைகோ ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், அடிக்கடி பயணம் செய்வோர் இ-கேட்ஸ் வசதியைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் குடிவரவு சோதனை விரைவாக முடியும். இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். இதை ஊக்குவிக்க விமான நிலைய நிர்வாகத்தை அவர் வலியுறுத்தினார்.
FTI-TTP பதிவு செய்யும் முறை பற்றி அவர் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். "Bureau of Immigration மற்றும் AAI ஆகியவை FTI-TTP-க்கு பதிவு செய்வதற்கான சோதனை செயல்முறையை விமான நிலையத்தில் உள்ள டிஜிட்டல் திரைகளில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒளிபரப்ப வேண்டும் என்று கூறப்பட்டது. இ-கேட்சை ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பயணிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எம்.பி. துரை வைகோ தெரிவித்தார். இதானல் பயணிகளுக்கு FTI-TTP மற்றும் இ-கேட்ஸ் பற்றி புரிய வைக்கும்.
முன்னதாக எம்.பி., துரை வைகோ திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக ராம் நேகியை சந்தித்தார். திருச்சி-சென்னை NH-ல் உள்ள G கார்னர் சந்திப்பில் ஒரு மேம்பால சுழற்சி சாலை கட்ட வேண்டும். இதற்காக ரயில்வே நிலத்தை NHAI-க்கு மாற்ற தெற்கு ரயில்வேயின் ஆதரவை அவர் கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















